ராணுவம் குவிப்பால் பதற்றம்- காஷ்மீர் பாஜக நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாஜக முக்கிய நிர்வாகிகளை அக்கட்சி மெலிடம் டெல்லி ஆலோசனை கூட்டத்துக்கு அவசரமாக அழைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் திடீரென 10,000-க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருப்பதாலேயே ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கும் அரசியல் சாசன பிரிவுகளில் ஒன்றாக 35ஏ-வை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ரத்து செய்தால் காஷ்மீரில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் அதை அடக்கவே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்பது அம்மாநில கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டு.
கிளி ஜோசியத்தை கையில் எடுத்த திமுக.. ஏலே பாண்டி நாகம்மாளுக்கு சீட் எடு!
காஷ்மீரில் பிற மாநிலத்தவர் குடியுரிமை பெற முடியாது; சொத்துகளை வாங்க முடியாது என்பது உள்ளிட்டவற்றுக்கு அடிப்படையாக இருப்பது 35ஏ அரசியல் சாசனப் பிரிவு. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மாநிலமாகவே இருந்து வருகிறது.
இந்த பெரும்பான்மை நிலைமையை மாற்றவே 35ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்த பதற்றமான நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை அக்கட்சி மேலிடம் டெல்லிக்கு அவசரமாக அழைத்துள்ளது.
டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் பங்கேற்பார்களா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை.
அதேநேரத்தில் 35ஏ பிரிவு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டமாக இருக்காது என்கின்றன பாஜக வட்டாரங்கள்.