குழம்பிய குட்டையில் மீன்.. இலங்கைக்கு உளவு கப்பலை அனுப்புகிறது சீனா.. உஷார் நிலையில் இந்திய கடற்படை!
டெல்லி: இலங்கை கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் திடீரென உளவு கப்பலை அனுப்புகிறதாம் சீனா. இதனையடுத்து இந்திய பெருங்கடலில் நமது கடற்படையினர் தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையை ராணுவ தளமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பன்னெடுங்காலமாக முயற்சித்து வருகின்றன. இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது, திருகோணமலையில் கால் பதிக்க முயன்றது அமெரிக்கா. அப்போது நமது நாட்டின் நாடாளுமன்றத்திலேயே இலங்கையை கடுமையாக எச்சரித்தவர் பிரதமர் இந்திரா காந்தி.
1990களுக்கு சர்வதேச அரசியல் ஒழுங்கு மாறியது. இந்தியா, இலங்கை அரசியல் களங்களும் மாறின. இலங்கையில் சீனாவும் கால்பதிக்க களமிறங்கியது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தி வந்த சுதந்திரப் போராட்டத்தை முன்வைத்து உலகின் பல நாடுகளும் எளிதாக இலங்கைக்குள் ஊடுருவின.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிர்மூலமாக்கப்பட்ட பின்னரும் இலங்கையை சர்வதேச நாடுகள் கூறு போட்டுக் கொள்வதில் முனைப்புடன் உள்ளன. இதில் சீனா அதீதமாக உள்ளது. இலங்கைக்கு பெருமளவு கடன் கொடுத்த சீனா அதற்கு மாற்றா அந்நாட்டின் நிலப்பகுதிகளைப் பெற்று சுயாட்சிப் பிரதேசங்களாக்கி வைத்திருக்கிறது. இது இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் தற்போது அரசியல், பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கிறது. என்னதான் புதிய ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றாலும் இலங்கையின் பொருளாதார நிலைமை அப்படி ஒன்றும் உடனே மாறுவதாகவும் இல்லை. இந்த குழப்பமான சூழ்நிலையைக் கூட இலங்கை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது.
தற்போது இலங்கைக்கு சீனாவின் உளவு கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாம். இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு இக்கப்பல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு இலங்கையில் முகாமிட்டிருக்குமாம் இந்த உளவுக் கப்பல்.
இத்தகவல்கள் வெளியான நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் நமது நாட்டின் கடற்படை அதிதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் உளவு கப்பல், இலங்கை அருகே நிறுத்தப்பட்டிருந்தது இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மீண்டும் இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பல் நுழைவது தெற்காசிய பிராந்தியத்தில் புதிய பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.