நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே திடீர் விலகல்
டெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த 6 குற்றவாளிகளில் ஒருவர் மைனர். இவ்வழக்கில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எஞ்சிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 பேரில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மற்றொரு தூக்கு தண்டனை கைதியான அக்சய் குமார் தரப்பு திடீரென உச்சநீதிமன்றம் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
அவர் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது இன்று பகல் 2 மணிக்கு விசாரணை தொடங்கியது.
அப்போது நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார். மேலும் வேறு ஒரு பெஞ்ச் இந்த சீராய்வு மனுவை நாளை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும் எனவும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
புதிய பெஞ்ச் அமைப்பு
இதனிடையே அக்சய்குமார் சீராய்வு மனுவை விசாரிக்க நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷ்ணன், போபண்ணா பெஞ்ச் நாளை விசாரிக்க உள்ளது.