கொரோனா லாக்டவுன்: 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து- முதல் கட்டமாக 8 ரயில்கள் இன்று இயக்கம்
டெல்லி: கொரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்குகிறது. இன்று மட்டும் மொத்தம் 8 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
லாக்டவுன் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதால் பேருந்து, ரயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
மே 1-ந் தேதியில் இருந்து மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள், பயணிகளை அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 400 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று முதல் பயணிகள் ரயில் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் முதல், 2வது, 3-வது வகுப்பு வசதிகள் மட்டும் உள்ளன. ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இன்று முதல் கட்டமாக 8 ரயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லியில் இருந்து இன்று 3 ரயில்கள் திப்ரூகர், பெங்களூரு மற்றும் பிலாஸ்பூருக்கு புறப்படுகின்றன. ஹவுரா, பாட்னா ராஜேந்திரா நகர், பெங்களூரு , மும்பை மற்றும் அகமதாபாத்தில் இருந்தும் இன்று டெல்லிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இன்று முதல் இயக்கம்.. சென்னை உள்பட 30 ரயில்கள் விவரம்
நாளை மே 13-ந் தேதியன்று மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் டெல்லியில் இருந்து 8 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. டெல்லியில் இருந்து ஹவுரா, பாட்னா, ஜம்மு தாவி, திருவனந்தபுரம், சென்னை, ராஞ்சி, மும்பை, அகமதாபாத்துக்கு நாளை ரயில்கள் இயக்கப்படும். மே 14-ந் தேதியன்று 5 ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதாவது திப்ரூகர், ஜம்முதாவி, பிலாஸ்பூர், ராஞ்சியில் இருந்து 4 ரயில்கள் டெல்லிக்கும் டெல்லியில் இருந்து புவனேஸ்வருக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.
மே 15-ல் திருவனந்தபுரம், சென்னையில் இருந்து டெல்லிக்கு 2 ரயில்களும் டெல்லியில் இருந்து மட்கோனுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. மே 17-ல் மட்கோன் டூ டெல்லி; டெல்லி டூ செகந்திரபாத் ரயில்களும் மே 18-ல் 3 ரயில்களும் மே 20-ல் 2 ரயில்களும் இயக்கப்பட இருக்கின்றன.