கொரோனா இரவு நேர ஊரடங்கில் விபரீதம்... உணவு தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் சுட்டு கொலை
நொய்டா: டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் இரவு நேர ஊரடங்கின் போது உணவு தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை உக்கிரமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகமாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதாவது ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,553 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 4 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 284.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியாக உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவிலும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உ.பி.யின் ஹபூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கபில் நொய்டாவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தால் ஹோட்டலை கபில் மூடியிருக்கிறார். அப்போது அங்கு வந்த 2 பேர் ஹோட்டலை திறந்து உணவு சப்ளை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். ஆனால் ஊரடங்கை மீறி தம்மால் உணவு சப்ளை செய்ய முடியாது என கபில் மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர்களுக்கும் கபிலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
Recommended Video
அப்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற இளைஞர்கள் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் அதே ஹோட்டலுக்கு திரும்பினர். அங்கே தூங்கிக் கொண்டிருந்த கபிலை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு 2 பேரும் தப்பி ஓடி இருக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆகாஷ், யோகேந்திரா என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.