இந்தியாவில் முதன்முறையாக...இந்த ஆண்டு காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்...காரணம் என்ன தெரியுமா?
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடளுமன்ற பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து நாட்டில் காகித வடிவ ஆவணங்கள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது இதுவே முதன்முறையாகும்.
இதேபோல் பட்ஜெட் கூட்டதொடருக்கு முன்னதாக நிதி அமைச்சரின் அல்வா தயாரிக்கும் பணியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
காகிதமில்லா பட்ஜெட்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு அனுமதி
இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து காகித வடிவில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல்முறையாக இப்போதுதான் ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் முறைப்படி மத்திய அரசு அனுமதி பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனாதான் காரணம்
பொதுவாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் 14 நாட்களுக்கு முன்பே நிதியமைச்சகத்துக்குச் சொந்தமான அச்சகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பட்ஜெட் குறித்த விவரங்களை காகிதங்களில் அச்சடிப்பது வழக்கம். கொரோனா காலம் என்பதால் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு ஆவணங்கள் அச்சடிக்கப்படவில்லை.
அல்வாவும் கிடையாது
பட்ஜெட் அனைத்தும் ஸ்மார்ட் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. எம்.பி.க்கள் யாருக்கும் பட்ஜெட் நகல்கள் வழங்கப்படாது. அவர்களுக்கு அனைத்தும் சாப்ட் காப்பியாக அனுப்பி வைக்கப்படும். பொதுவாக பட்ஜெட் தயாரிப்பு பணிக்கு முன்பாக, வழக்கமாக அல்வா தயாரித்து அதனை பட்ஜெட்தயாரிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நிதியமைச்சர் வழங்குவார். ஆனால் கொரோனா காரணமாக அல்வா தயாரிக்கும் மரபும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.