வெடித்தது பஞ்சாயத்து.. சிவிங்கி புலிகள் இந்தியாவில் நீண்டகாலம் வாழாது- சூழல் ஆர்வலர்கள் வார்னிங்!
டெல்லி: நமீபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ள சிவிங்கி புலிகள் நீண்டகாலம் இந்தியாவில் வாழ்வதற்கான சூழ்நிலை இந்தியாவில் இல்லை என்று எச்சரிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் மட்டுமே இந்தியாவில் சிங்கங்கள் வாழும் வனப்பகுதியாகும். கிர் சிங்கங்கள் சிலவற்றை மத்திய பிரதேச மாநிலத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நீண்டகாலம் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் கைகூடவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாமல் போய்விட்ட சிவிங்கிப் புலிகள் இறக்குமதி செய்யப்பட்டன. பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவை மத்திய பிரதேசத்தின் குனோ பூங்காவில் கொண்டுவந்துவிடப்பட்டன. முதல் கட்டமாக 8 சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட திமுக 5-ல் இருந்து 3ஆக குறைப்பு! 2 நிர்வாகிகளுக்கு கல்தா! செந்தில்பாலாஜியின் ஹிட் லிஸ்ட்
மோடி பேச்சு
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த நூற்றாண்டுகளில் இயற்கையை அழிப்பது அதிகாரத்தின், நவீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. 1947-ல், நாட்டில் கடைசியாக இருந்த மூன்று சிறுத்தைகளும் இரக்கமின்றி, பொறுப்பற்ற தன்மையுடன் சால் வனப்பகுதிகளில் வேட்டையாடப்பட்டன.
1952 ல் இந்தியாவிலிருந்து சிறுத்தைகள் அழிந்து போன போதும் கடந்த 70 ஆண்டுகளாக அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. சுதந்திரத்தின் புதிய உத்வேகத்துடன் நாடு சிறுத்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியுள்ளது என்றார்.
மக்கள் அச்சம்
சிவிங்கிப் புலிகளின் இந்திய வருகை பெருமைக்குரியதாக போறப்படுகிறது அதேநேரத்தில் சிவிங்கி புலிகளை மையமாக வைத்து அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. முதலில் குனோ உயிரியல் பூங்காவை சுற்றிய கிராம மக்களின் அச்சம். இரைதேடி தங்களது கிராமங்களுக்கு சிவிங்கி புலிகள் வந்துவிடுமோ? இந்த புலிகளுக்காக தாங்கள் வெளியேற்றப்படுவோமோ? என்கிற அச்சம் ஒரு பக்கம்.
சிங்கம் பிரச்சனைதான் காரணம்
இன்னொரு பக்கம் சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆய்வாளர்கள், சிவிங்கிப் புலிகள் வாழ்வதற்கான காலநிலை உள்ளிட்ட சூழல் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளுக்கு இந்தியா எப்போதும் தாயக நிலம் இல்லை; இந்தியாவில் வளர்ப்பு பிராணிகளில் ஒன்றாகத்தான் சிவிங்கி புலிகள் இருந்தன. ஆகையால் இந்திய நிலத்தில் நீண்டகாலத்தில் இவை தாக்கு பிடிக்குமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர். மேலும் குஜராத்தின் கிர் சிங்கங்களை மத்திய பிரதேசத்துக்கு கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை மாடைமாற்றுகிற முயற்சிதான் இது. குஜராத்தின் கிர் சிங்கங்கள் இந்திய வாழ்விடத்துக்கு பழக்கப்பட்டவை. அவற்றை அண்டை மாநிலத்துக்கு மாற்றுவதில் சிக்கல் இல்லை. ஆனால் சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்கின்றனர்.
புலி, சிங்கங்கள் எண்ணிக்கை
இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2014 இல் 2,226-லிருந்து 2018 இல் 2,967 ஆக அதிகரித்துள்ளது.2014ல் ரூ.185 கோடியாக இருந்த புலிகள் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2022ல் ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2015 இல் 523-லிருந்து 28.87 சதவிகிதம் அதிகரித்து தற்போது 674 ஆக உயர்ந்துள்ளது.