விவசாய சட்டங்கள்: உச்சநீதிமன்றத்தின் குழுவை புறக்கணிக்க 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு!
டெல்லி: விவசாய சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைக்க உத்தேசித்துள்ள வல்லுநர் குழு முன் ஆஜராவது இல்லை என டெல்லியில் போராடும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பல மாநிலங்களின் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு 48 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதுவரை நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இதனிடையே விவசாய சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால் நாங்களே அதை செய்ய நேரிடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தது.
மேலும் விவசாய சட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக இருப்பதற்கும் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான அணுகுமுறைக்கும் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதனை தொடர்ந்து விவசாய சட்டங்கள் தொடர்பாக வல்லுநர் குழு ஒன்றை அமைக்க உத்தேசித்ததாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விவசாய சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கும் போக்கை கண்டிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அமைக்க இருக்கும் வல்லுநர் குழுவை புறக்கணிப்போம் என டெல்லியில் போராட்டம் நடத்தும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விவசாய சங்கங்கள் கூட்டமைப்பான சம்யுக் கிஷான் மோர்ச்சாவின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.