Flashback: வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்.. வர மறுத்த முஷாரப்.. ஆக்ராவில் நடந்த பேச்சுவார்த்தை!
இந்தியாவின் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு வணக்கம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதற்காக சந்திப்பை தவிர்த்த பர்வேஸ் முஷாரப் பின்னாட்களில், வாஜ்பாயுடன் தானாக முன்வந்து கைலுக்கினார்.
டெல்லி : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று காலமானார். இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நிகழ்ந்து வந்த நிலையில், 2001ல் முஷாரப் - வாஜ்பாய் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது. 2002ல் பிராந்திய உச்சி மாநாட்டில், வாஜ்பாயுடன் தானாக முன்வந்து கைகுலுக்கினார் பர்வேஸ் முஷாரப்.
காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வருமாறு பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரப் பர்வேஸ் முஷாரப்புக்கு பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்திருந்தார்.
அதைஏற்று டெல்லி ஆக்ராவில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும், அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படுவதற்கு இந்தப் பேச்சுவார்த்தை நிகழ்வும் ஒரு காரணமாக அமைந்தது.
ராணுவ தளபதி முதல் மரண தண்டனை வரை.. காலமானார் பாக். முன்னாள் அதிபர்.. யார் இந்த பர்வேஸ் முஷாரப்?
இந்தியா - பாகிஸ்தான்
1999 காலகட்டத்தில் இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் பிரதமராக இருந்தார். இரு நாட்டு தலைவர்களுமே பரஸ்பர நல்லுறவை விரும்பினர். லாகூரில் இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் வரவேற்பு அளித்தார். ஆனால், இந்த நிகழ்வில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதியான பர்வேஸ் முஷாரப் கலந்துகொள்ளவில்லை. இரு நாட்டு பிரதமர்கள் சந்திக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பங்கேற்காதது சர்ச்சையைக் கிளப்பியது. இந்திய பிரதமருக்கு வணக்கம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதாலேயே தான் பங்கேற்கவில்லை என பின்னர் தெரிவித்தார் முஷாரப். அந்தளவுக்கு இந்தியா மீது கடுமையான விரோதம் கொண்டிருந்தவர் முஷாரப்.
கார்கில் போர்
இந்த நிகழ்வுக்குப் பிறகு சில மாதங்களில் 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்தது. இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்தது. இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.
அதிபர் முஷாரப்
பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் தான் இந்த கார்கில் தாக்குதலுக்கானத் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்த தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரப்பும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று அப்போது கூறினார். பின்னர், சில காலத்தில் பர்வேஸ் முஷாரப், இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி பாகிஸ்தான் அதிபர் ஆனார்.
ஆக்ரா பேச்சுவார்த்தை
கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில், அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்பும் ஆக்ராவில் சந்தித்து பேசினர். இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியில் எவ்வித முன்னேற்றம் இன்றி இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தில் கூட இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிடவில்லை.
கைகுலுக்கிய முஷாரப்
2002-ல் நடந்த பிராந்திய உச்சி மாநாட்டில், அதாவது இந்தியாவுக்கு எதிரான கார்கில் இராணுவ நடவடிக்கை நடைபெற்ற 3 ஆண்டுகளுக்குள், பர்வேஸ் முஷாரப், தனது உரையை முடித்துவிட்டு, திடீரென இந்தியப் பிரதமர்வாஜ்பாயை நோக்கி கைகுலுக்கி சமாதானம் பேச முன்வந்தார். இது உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்தது. இந்தியாவோடு பயங்கரமான எதிர்ப்பைக் கடைபிடித்து வந்த முஷாரப், இந்திய பிரதமரோடு கைலுக்கியதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தன.
தேசத்துரோக வழக்கு
கடந்த 2007-ஆம் ஆண்டு தான் அதிபர் பதவியில் நீடிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சிறையில் அடைக்கப்பட்டார். 43 நாள்கள் பாகிஸ்தானில் எமர்ஜென்ஸி அமலில் இருந்தது. மீண்டும் அதிபராகப் பதவியேற்ற முஷாரப் கடும் அரசியல் நெருக்கடி காரணமாக 2008-ஆம் ஆண்டு பதவி விலகினார். கடந்த 2013-ஆம் ஆண்டு நவாஸ் ஷெரிஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.