நேர் மாறான முடிவு.. 2 டோஸ் இடைவெளியை குறைத்தால்.. டெல்டா கொரோனாவுக்கு எதிராக அதிக பலன்.. புதிய ஆய்வு
டெல்லி: குறைவான நாட்கள் இடைவெளியில் பைசர் தடுப்பூசியைச் செலுத்துவதன் மூலம் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலை அதிகரிக்க முடிவதாக லான்செட் இதழில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உருமாறிய கொரோனா முக்கியமாக இருந்தது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா B.1.1.7 வகை கொரோனா பாதிப்பு நாட்டில் மிக மோசமாக இருந்தது. கொரோனா பாதிப்புகளும் சரி, உயிரிழப்புகளும் சரி அதிகமாகவே இருந்தது.
பைசர் தடுப்பூசி
இந்நிலையில், பிரபல லான்செட் இதழில் உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராக பைசர் தடுப்பூசி எந்தளவுக்குப் பலன் அளிக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பைசர் தடுப்பூசியின் சிங்கிள் டோஸ் கொரோனா வைரசுக்கு எதிராக 79% பலன் அளிக்கிறது. அதேநேரம் ஆல்பா வகை கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசியின் தடுப்பாற்றல் 50% ஆகவும், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 32% ஆகவும் பீட்டா வகை கொரோனாவுக்கு எதிராக 25%ஆகவும் குறைவதாகக் கூறப்பட்டுள்ளது.
கால இடைவெளியைக் குறைக்க வேண்டும்
கொரோனா ஏற்படுவதை முற்றிலுமாக தடுப்பதைக் காட்டிலும், தீவிர கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களை எந்தளவு குறைக்க முடிகிறது என்பதே முக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பைசர் தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் குறைப்பதன் மூலம் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலை அதிகப்படுத்த முடிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு அறிவிப்பு
இது மத்திய அரசின் அறிவிப்புக்கு நேர் மாறாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களின் கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பாற்றலை அதிகப்படுத்த முடிவதாக மத்திய அரசு தெரிவித்திருந்து. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களின் கால இடைவெளி 8-12 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.
முடிவு ஏன்
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை அதிகரித்ததே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இருப்பினும், தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் பிரிட்டன் நாட்டில் இரண்டு டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பாற்றல் உயர்வது உறுதி செய்யப்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினர்.
பிரிட்டன் அறிவிப்பு
இருப்பினும், பிரிட்டனின் இந்த ஆய்வு டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதில்லை. அதேநேரம் இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே, பிரிட்டன் அரசு தடுப்பூசிக்கான கால இடைவெளியைக் குறைத்தது. குறிப்பாக, இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவும் டெல்டா வகை கொரோனா காரணமாகவே கால இடைவெளி குறைக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..