கோதுமை ஏற்றுமதி தடைக்கு ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு..இந்தியாவுக்கு புதுச்சிக்கல்
டெல்லி: இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு நாடும் ஏற்றுமதியை நிறுத்தினால் உலக சந்தை ஸ்தம்பித்துவிடும் என இந்தியாவுக்கு ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அடுத்தமாதம் ஜி7 மாநாடு நடக்க உள்ளதால் இந்தியாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை உலக நாடுகளிலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான்
குறிப்பாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் பல நாடுகளில் உயர தொடங்கி உள்ளன.
கோதுமை தட்டுப்பாடு
இதற்கு அடுத்தபடியாக தற்போது கோதுமை தட்டுப்பாடு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது உலகில் நடக்கும் கோதுமை ஏற்றுமதியில் 25 சதவீததத்தை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் தான் மேற்கொள்கின்றன. இரண்டரை மாதத்துக்கு மேலாக தொடரும் போர் நடவடிக்கையால் இந்த நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. போரால் உக்ரைனில் கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், பல்வேறு பொருளாதார தடைகளால் ரஷ்யாவிடம் இருந்து கோதுமை வாங்க முடியாத நிலை பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
2வது இடத்தில் இந்தியா
இதனால் உக்ரைன், ரஷ்யாவிடம் இருந்து கோதுமை பெற்று வந்த நாடுகள் கோதுமை பெற மாற்றுவழியை தேடி வருகின்றன. குறிப்பாக கோதுமை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சீனா, இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் மீது நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் இந்தியாவும் கோதுமை உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை
இந்நிலையில் தான் எதிர்பாராத விதமாக இந்தியாவில் கோதுமை விலை உயர தொடங்கி உள்ளது. இதனை சரிசெய்ய மத்திய அரசு திட்டமிட்டு வந்தது. இதையடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கோதுமை, கோதுமை பொருட்கள் மீதான விலை ஏற்றத்தை தவிர்க்கவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஜி7 நாடுகள் எதிர்ப்பு
இதற்கு ஜி7 நாடுகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜி7 நாடுகளின் குழுவின் விவசாயத்துறை அமைச்சர்கள் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடையை கண்டித்துள்ளனர். இதுபற்றி ஜெர்மனி விவசாயத்துறை அமைச்சர் செம் ஒஸ்டமிர் கூறுகையில், ‛‛இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது போன்று ஒவ்வொரு நாடுகளும் ஏற்றுமதியை நிறுத்தினால் மார்க்கெட் நிலைமை மிகவும் மோசமாகும். இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்'' என தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் மாநாடு
மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பிரச்சனைக்கு மத்தியில் இந்தியா இத்தகையை நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என ஜி7 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.இதற்கிடையே அடுத்த மாதம் (ஜூன்) ஜெர்மனியில் ஜி7 மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கோதுமை ஏற்றுமதி தடை பற்றிய விவாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.