கல்வான் விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து சீனில் வந்த நடிகை நக்மா.. பாஜக மீது கடும் தாக்கு
டெல்லி: ‛கல்வான் அழைக்கிறது' என நடிகை ரிச்சா சத்தாவின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்ப்பு தெரிவித்த நடிகர் அக்சய் குமாரை, நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போது நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேரந்தவருமான நக்மா சீனில் வந்து பரபர கருத்து தெரிவித்து விவாதத்தை இன்னும் சூடாக்கி உள்ளார்.
இந்திய திரையுலகில் தற்போது ஒரு பெரிய விவாதம் போய் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்தின் தகவல் ஒன்றை வைத்து கிளம்பிய இந்த விவாதம் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்த விவாதம் என்பது அரசியல் களத்திலும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.
நடிகை ரிச்சா சத்தா, நடிகர்கள் அக்சய் குமார், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இடையே நடந்த இந்த விவாதத்தில் தற்போது நடிகையும் அரசியல் வாதியுமான நக்மா இணைந்துள்ளார். அப்படி என்ன நடந்தது? எதுபற்றிய விவாதம்? எங்கிருந்து துவங்கியது? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது - நன்றி சொன்ன மனைவி
ராணுவ காமாண்டர் பேட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் வடக்கு ராணுவ பிரிவு கமாண்டர் உபேந்திரா திவேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில், ‛‛பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பான எந்த வகையான அரசின் உத்தரவையும் செயல்படுத்துவதற்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இத்தகைய ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் அவர்களுக்கான நமது பதில் என்பது வேறு மாதிரி இருக்கும்'' என கூறியிருந்தார்.
சர்ச்சையை கிளப்பிய நடிகை ரிச்சா சத்தா
இந்த பதிவு இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது. இந்த வேளையில், இதனை பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா கருத்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‛‛கல்வான் ஹாய் சொல்கிறது'' என தெரிவித்தார். அதாவது இந்தியா-ராணுவம் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் போக்கு உள்ளது. 2020ல் நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தான் இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் வகையில் கல்வான் ஹாய் சொல்கிறது என அவர் பதிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் பயந்துபோன நடிகை ரிச்சா சத்தா, ‛‛இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனது பதிவு யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்'' என தெரிவித்து இருந்தார். இருப்பினும் அவரை நெட்டிசன்கள் விடாமல் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சீனில் வந்த நடிகை நக்மா
நடிகை ரிச்சா சத்தா புள்ளிவைத்து விவாதத்தை துவங்கிய நிலையில் தான் தற்போது இது பெரும் விவாதமாக மாறி போய் உள்ளது. இந்நிலையில் தான் ரிச்சா சத்தாவின் கருத்து பற்றி ஓய்வு பெற்ற கர்னல் அர்ஜூன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ரிச்சா சத்தாவின் ட்விட்டில் கல்வான் சர்ச்சை, ராணுவ வீரர்களின் தியாகத்தை கேலி செய்ததாக நான் நினைக்கவில்லை. மாறாக தேர்தலில் பாஜகவுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் ஜெனரல் கூறியதை தான் அவர் குறிவைத்துள்ளார். இந்திய ராணுவம் அரசியலாக்கப்படும்போது, விமர்சனங்களக்கம், கேலிகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்'' என கூறியிருந்தார். இதை பார்த்த நடிகையும், மகாராஷ்டிரா காங்கிரஸ் துணை தலைவருமான நக்மா, ‛ சரியாக சொன்னீர்கள்' என தெரிவித்தார்.
ஏன் நுழைந்தனர்? என கேள்வி
மேலும், நக்மா இன்னொரு பதிவில், ‛‛நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும் வேண்டி கல்வான் பிரச்சனையில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை இந்தியர்கள் எப்போதும் இதயத்தில் சுமப்பார்கள். மொத்தம் 20 வீரர்களை இழந்த நிலையில் சீன வீரர்கள் ஏன் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நம் எல்லைக்குள் நுழைந்தனர்?'' என கேள்வி எழுப்பி இருந்தார். நக்மாவின் இந்த கேள்வி என்பது நடிகை ரிச்சா சத்தாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் நக்மாவையும் சிலர் விமர்சிக்க தொடங்கினர்.
மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை
இந்நிலையில் தான் நக்மா தனது பதிவு பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி நக்மா, "நான் இந்திய ராணுவத்தை மட்டுமே ஆதரித்தேன். ரிச்சா சத்தாவின் ட்விட்டை ஆதரிக்கவில்லை. எனது பதிவை நன்றாக பார்த்தால் தெரியும். இதனால் ராணுவத்தை கேலி செய்கிறேன் என கூறுவது சரியில்லை. இருப்பினும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயாராக இருந்தால் அதனை செய்ய மத்திய பாஜக அரசு ஏன் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை?''என தெரிவித்துள்ளார்.
அக்சய் குமார்-பிரகாஷ் ராஜ் கருத்து
முன்னதாக, நடிகை ரிச்சா சத்தா பதிவுக்கு நடிகர் அக்சய் குமார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்த பதிவை பார்க்கும்போது மனம் வலிக்கிறது. நம் நாட்டின் ஆயுதப்படையில் நாம் நன்றி இன்றி இருக்க கூடாது. அவர்களால் தான் நாம் இன்று இருக்கிறோம்'' என கூறி வருத்தத்தை பதிவு செய்திருந்தார். இந்த வேளையில் நடிகர் பிரகாஷ் ராஜ் குறுக்கே வந்தார். இந்த விவகாரத்தில் ரிச்சா சத்தாவுக்கு ஆதரவாக நிற்பதாக தெரிவித்த அவர் அக்சய் குமாரையும் விமர்சித்தார். அதில், ‛‛உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்சய் குமார். ரிச்சா சத்தா உங்களை விட நம் நாட்டு மக்களுக்கு மிகவும் பொறுத்தமானவர்" என கோபத்தை கொப்பளித்துள்ளார்.