இந்தியாவில் சிறார்களுக்கு வேக்சின் எப்போது..18+க்கு கூடுதலாக பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு? பரபர தகவல்
டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு கொரோனா வேக்சின் செலுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்தும் இன்னும் 2 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவை இன்னும் எந்தவொரு நாடும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. இருப்பினும், சில நாடுகள் சிறப்பான வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் குறைத்துள்ளன.
தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

வேக்சின் பணிகள்
இந்தியாவில் தற்போது 18+ அனைவருக்கும் வேக்சின் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டில் தற்போது பெரும்பாலும் கோவாக்சின் தடுப்பூசியே 12-16 வாரக் கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் எப்போது என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. அதேபோல 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்ற கேள்விகளும் எழுந்தன.

சிறார்களுக்கு எப்போது
இந்நிலையில், NTAGI எனப்படும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இவை குறித்து இன்னும் 2 வாரங்களில் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதர நோய்ப் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சரியான முடிவு
அதைத்தொடர்ந்து வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18+ மக்களுக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாகக் குழந்தைகளுக்கு வேக்சின் போடுவதிலேயே முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பல மாநிலங்களிலும் பள்ளிகளைத் திறக்கப்படு வரும் நிலையில், இதுவே சரியான முடிவாக இருக்கும் எனச் சுகாதார வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பூஸ்டர் டோஸ்
அதேபோல பூஸ்டர் டோஸ் குறித்தும் உலகின் பல்வேறு நாடுகளும் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதே கருத்தைத் தான் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், தற்போது வரை 2 டோஸ் வேக்சினே உயிரிழப்பையும் தீவிர பாதிப்பையும் தடுப்பதால் பூஸ்டர் டோஸ்கள் தற்போதைய சூழலில் தேவையில்லை என்றும் அனைத்து நாடுகள் உள்ள மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசியைச் செலுத்துவதில் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சில ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பூஸ்டர் டோஸ் எப்போது
இந்தியாவில் இதுவரை பூஸ்டர் டோஸ் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், பூஸ்டர் டோஸ் குறித்தும் இன்னும் 2 வாரங்களில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இறுதி முடிவை எடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பூஸ்டர் டோஸை காட்டிலும் சிறார்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications