அக்னிபாத் திட்டம்.. இன்று முதல் ராணுவம், கடற்படையில் சேர விண்ணப்பம்!
டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றாலும், அந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்க்கும் நடவடிக்கை கடந்த 24ம் தேதி தொடங்கி வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இந்திய விமானப்படையில் பணிக்கு சேர இதுவரை இரண்டே முக்கால் லட்சம் பேர் நாடு முழுவதும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்களை நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அக்னிபாத் என்ற புதிய திட்டம் கடந்த 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றிய பின், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணியில் நீட்டிக்கப்படுவர். மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
இந்தத் திட்டத்தைக் கண்டித்து உத்தரப் பிரதேசம், பீகார், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. உத்தரப் பிரதேசம், பீகார், தெலங்கானா மாநிலங்களில் ரயிலுக்கு தீ வைக்கும் நிகழ்வுகளும் ஏற்பட்டன.
இப்படி ஒரு பக்கம் இளைஞர்களின் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் கூட, அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பணியில் சேர விண்ணப்பங்களும் குவிந்து வருகின்றன. அதன்படி இந்திய விமானப்படையில் பணிக்கு சேர இதுவரை இரண்டே முக்கால் லட்சம் பேர் நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பித்துள்ளனர். விமானப்படையில் பணிக்கு சேர்க்கும் நடவடிக்கை கடந்த 24-ஆம் தேதி தொடங்கி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.