156.76 கோடி டோஸ்கள்- கொரோனா தடுப்பூசி போட ஆரம்பிச்சு ஒரு ஆண்டு நிறைவு- பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. இதுவரை இந்தியாவில் 156.76 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது. தெலுங்கானாவின் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அறிமுகம் செய்தது.
பூஸ்டர் டோஸ்: கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் எந்த தடுப்பூசி போட வேண்டும்? அதிகாரிகள் முக்கிய விளக்கம்
கொரோனா தடுப்பூசிகள்
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் மெகா முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு போடப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.
தடுப்பூசி போட்டவர்கள் எத்தனை பேர்?
இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92% பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 68%-க்கும் அதிகமானோர் 2 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது.
பூஸ்டர் தடுப்பூசி
தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சுகாதாரம், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ட்வீட்
கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 66 லட்சம் தடுப்பூசிகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66 லட்சத்துக்கும் அதிகமாக (66,21,395) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 156.76 கோடியைக் (1,56,76,15,454) கடந்தது. 1,68,19,744 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,38,331 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,50,85,721 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.51 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,71,202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 15,50,377. ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 4.18 சதவீதமாக உள்ளது.