குட் நியூஸ் - மிக விரைவில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி... ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசுக்கான முதல் தடுப்பு மருந்தாக ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகில் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. குறிப்பாக, பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசும் பீதியைக் கிளப்பியுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தடுப்பு மருந்திற்கு ஒப்புதல்
அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்கள் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனையை முடித்துள்ளனர். அதேபோல அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்தின் சோதனைகளும் நிறைவடைந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்காவது ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் இந்த நாடுகளில் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
அனுமதி கோரி விண்ணப்பம்
ஃபைசர், பாரத் பயோடெக், சீரம் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இம்மாத தொடக்கத்தில் விண்ணப்பித்திருந்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்திற்கு இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தை விநியோகிக்கும் பொறுப்பு புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம், கூடுதல் தகவல்களை சமர்ப்பிக்குமாறு சீரம் நிறுவனத்திடம் கேட்டிருந்தது. சீரம் நிறுவனம் கடந்த வாரம் கூடுதல் தகவல்களை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்தது. அதன்படி விரைவில் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது ஒப்புதல்
பிரிட்டன் நாட்டில் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இந்தியாவிலும் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். பிரிட்டனில் வரும் வாரத்தில் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபைசர் தடுப்பு மருந்து
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்திற்கு ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இன்னும் விளக்கவில்லை. இதனால் ஃபைசர் தடுப்பு மருந்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இந்திய நிறுவனத்திற்கு எப்போது ஒப்புதல்
அதேபோல ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்சின் என்ற தனது தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்கும் விண்ணப்பித்திருந்தது. ஆனால், கோவாக்சினின் மூன்றாம்கட்ட பரிசோதனை இன்னும் நிறைவடையாததால் அந்தத் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்க மேலும் அதிக காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.