பிஎப்ஐ தடை.. உபா தீர்ப்பாய அதிகாரியாக நீதிபதி தினேஷ் குமாரை நியமித்த மத்திய அரசு.. யார் இவர்?
டெல்லி: இந்தியாவில் 5 ஆண்டு வரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் உபா தீர்ப்பாயத்தின் விசாரணை அதிகாரியாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின
இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி திடீரென்று என்ஐஏ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட மொத்தம் 15 மாநிலங்களில் 90க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடந்தது.

என்ஐஏ சோதனை
பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி வழங்கல், பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனையானது பிஎப்ஐ எனும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிஎப்ஐக்கு தடை
அதன்பிறகும் கூட கர்நாடகா, அசாம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்பட 8 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு கடந்த மாதம் 28 ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த அமைப்பு 5 ஆண்டுகள் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அதன் 8 பிற துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

உபாவில் வழக்குப்பதிவு
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மீது நாடு முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்பான விசாரணை குறித்து தீர்ப்பாயம் விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது.

விசாரணை அதிகாரி நியமனம்
இந்நிலையில் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான வழக்கு மற்றும் தடை தொடர்பான விசாரிக்க 'உபா' தீர்ப்பாய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி விசாரணை அதிகாரியாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் ஷர்மாவை நியமனம் செய்து இன்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் 2022 பிப்ரவரி 28 முதல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இவர் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரங்களை ஆய்வு செய்து தடை தொடர்பாக விசாரணை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications