“வெடிக்கும்” நிலையில் இந்திய பணவீக்கம்.. அப்படின்னா என்ன? ஒரே வரியில் வகுப்பெடுத்த ரகுராம் ராஜன்
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்ததுடன் பணவீக்கமும் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பணவீக்கம் என்றால் என்ன என்று ஒரே வரியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.க்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலையேற்றம் போன்றவை ஏற்பட்டு உள்ளன. இதனால் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்றவை ஏற்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு நிகராக கடந்த 6 ஆண்டுகளாகவே தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரல் தொற்றால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. ஏற்றுமதி இறக்குமதி முடங்கியதால் வளர்ந்து வரும் நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

ரஷியா - உக்ரைன் போர்
அதிலிருந்து மீண்டு வருவதற்குள் ரஷியா - உக்ரைன் நாடுகளிடையே வெடித்த போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தன. விலையேற்றம் காரணமாக பணவீக்கமும் பெருகி இருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.

டாலர் மதிப்பு உயர்வு
இந்திய பங்குச்சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல நாடுகளின் நாணய மதிப்பு சரிவடைந்து வருவதால், முதலீடுகள் அனைத்தையும் டாலருக்கு மாற்ற நாடுகள் முடிவு செய்ததால் டாலரின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதும் டாலர் மதிப்பு உயர்வதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, ஓமைக்ரான், உக்ரைன் - ரஷியா போர், சீனாவில் ஊரடங்கால் உதிரிபாகங்கள் வரத்து தடைப்பட்ட சூழலிலும் பணவீக்கம் 7% க்கும் குறைவாகவே உள்ளது.

ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் பாராட்டி இருக்கிறார். சீனா, பாகிஸ்தானைவிட இந்தியாவின் கடன் குறைவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்." என்றார். இந்த நிலையில் ரகுராம் ராஜன் ட்விட்டரில் #Inflation என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒருபதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "இது நீங்கள் எவ்வளவு உருவாக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல. நீங்கள் உருவாக்கியதில் இருந்து எவ்வளவு பெறுகிறீர்கள் என்பதை பொறுத்தது." என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications