பிஎப்ஐ தடை.. நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக எஸ்டிபிஐ கண்டனம்
டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவு பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதி என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் பைஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள்.
இதனை கண்டித்து அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போலீஸ் ரெய்டு
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

பி.எப்.ஐக்கு தடை
நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

துணை அமைப்புகள்
இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எஸ்.டி.பி.ஐ கண்டனம்
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை செய்ததற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் பைஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மக்களின் உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும்.

அரசியலமைப்புக்கு எதிரானது
பாஜக ஆட்சியின் தவறான மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் கைது மற்றும் சோதனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். பேச்சு சுதந்திரம், எதிர்ப்புகள் மற்றும் அமைப்பு ஆகியவை, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கும், எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தாமல் மக்களைப் பயமுறுத்துவதற்கும், விசாரணை அமைப்புகளையும், சட்டங்களையும் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது.

குரல் உயர்த்த வேண்டும்
நாட்டில் பிரகடனப்படுத்தப்படாத அவசரநிலை தெளிவாக காணப்படுகின்றது. மேலும், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், மக்களும், இந்திய அரசியலமைப்பின் ஜனநாயகம் மற்றும் மதிப்புகளை காப்பாற்ற தங்கள் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இது." என்று அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications