மமதா, உத்தவ் உட்பட பல மாநில முதல்வர்கள் உடன் இன்று திடீர் ஆலோசனை.. சோனியா அதிரடி திட்டம்.. பின்னணி!
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் உடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நீட் தேர்வு, ஜிஎஸ்டி பிரச்சனை என்று பல்வேறு விஷயங்களை இதில் விவாதிக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் கட்சிக்குள் எழுந்துள்ளது. இன்னும் 6 மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கொஞ்சமும் பலமின்றி காணப்படுகிறது.
அதேபோல் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையும் நிலவவில்லை. இந்த நிலையில்தான் பல்வேறு மாநில முதல்வர்கள் உடன காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். இன்று (புதன்) மதியம் 2.30 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடக்க உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட காங்கிரசுக்கு நெருக்கமாக இருக்கும், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மாநில முதல்வர் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்பு!
நீட் தேர்வு, மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு பிரச்சனை என்று பல்வேறு விஷயங்களை இதில் விவாதிக்க உள்ளனர். நீட் தேர்வுதான் இந்த ஆலோசனையில் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள். மாநில அரசுகள் நீட் தேர்வை அனுமதிக்க கூடாது என்று இந்த ஆலோசனையில் தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது.
அதேபோல் அடுத்தடுத்து நடக்க உள்ள தேர்தல் குறித்தும், எதிர்க்கட்சிகள் ஏன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இதில் பேச உள்ளனர்.