எப்ஃபிஐ வரை சென்ற விசாரணை.. கிரைம் படத்திற்கு இணையான தரூர் - சுனந்தா புஷ்கர் வழக்கு.. பின்னணி
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து முன்னாள் எம்பி சசி தரூர் விடுவிக்கப்பட்டுள்ளார். எப்ஃபிஐ வரை விசாரணைக்கு சென்ற இந்த மரண வழக்கில் இருந்து சசி தரூர் திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். ஏழரை வருட கொடுமை என்று சசி தரூர் வர்ணித்த இந்த வழக்கில் என்னென்ன நடந்தது என்று பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில், ஆர்மி குடும்பத்தில் பிறந்த சுனந்தா புஷ்கர் வசதியான பிசினஸ் சூழ்நிலையில் வளர்ந்தவர். துபாயில் பல்வேறு பெரிய நிறுவனங்கள், ஐபிஎல்லில் முதலீடு செய்த ஆர்எஸ்டபிள்யு போன்ற பெரிய நிறுவனங்களில் இவர் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்தவர்.
1980 பிற்பகுதியில் சஞ்சய் ராணா என்ற சக கல்லூரி நண்பரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்படவே 1988ல் இவர் டைவர்ஸ் செய்தார். அதன்பின் துபாய் சென்றவர் 1991ல் சுஜித் மேனன் என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு 1992ல் குழந்தையும் பிறந்தது.

விபத்து
1997ல் சுஜித் மேனன் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் 2008 வரை சுனந்தா மகனை கவனித்து வந்தார். இந்த காலத்தில் பல்வேறு பிஸ்னஸ் பணிகளை மேற்கொண்டு வந்தார். 2008 துபாயில் நடந்த பார்ட்டி ஒன்றுக்கு சசி தரூர் தனது மனைவி சன்னி வர்க்கே (கனடாவை சேர்ந்தவர்) உடன் வந்திருந்தார். இந்த சந்திப்பில் சசி தரூர் சுனந்தா இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் 2010ல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு பேருக்கும் இது மூன்றாவது திருமணம்.

வழக்கு டைம் லைன்
இதற்கு பின் இருவரும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. முக்கியமாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தாரார் மற்றும் தரூர் இடையே தகாத உறவு இருப்பதற்காக சுனந்தா குற்றஞ்சாட்டி வந்தார். இந்த மோதல் நீடித்த நிலையில் 2014ல் சுனந்தா மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இந்த மரண வழக்கில் இதுவரை நடந்த விஷயங்கள் குறித்து பார்க்கலாம்
• ஜனவரி 16, 2014: பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தாராரிடம் சுனந்தா புஷ்கர் டிவிட்டரில் மோதலில் ஈடுப்பட்டார். சசி தரூருக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சுனந்தா புஷ்கர் டிவிட்டரில் சண்டை போட்டார்.
• ஜனவரி 17, 2014: டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலில் இறந்த நிலையில் சுனந்தா புஷ்கர் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இவரின் கடந்த கால மெடிக்கல் வரலாறு காரணமாக இவர் அதிக மருந்துகள் எடுத்து மரணித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
• ஜனவரி 19, 2014: சுனந்தா புஷ்கர் உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு இவரின் உடலில் ஆங்சைட்டி மருந்துகள் எடுத்தற்கான அடையாளங்கள் இருந்தன. ஆனால் மருந்தின் அளவு கூடுதலாக இல்லை.
• ஜனவரி 21, 2014: இவரின் உடலில் விஷம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், இதனால் மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது.
• ஜனவரி 23, 2014: டெல்லி கிரைம் பிரிவிற்கு வழக்கு மாற்றப்பட்டது.
• ஜனவரி 25, 2014: மீண்டும் வழக்கு டெல்லி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

விஷம் குற்றச்சாட்டு
• செப்டம்பர் 30, 2014: சுனந்தா புஷ்கர் உடலில் இருந்து ரத்த மாதிரிகள், குடலில் இருந்த மாதிரிகள் ஆகிய விஷ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அளிக்கப்பட்டது. இதில் இவரின் உடலில் விஷ மாதிரிகள் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறினார்கள்.
• ஜனவரி 15, 2015: ஆனாலும் சந்தேகத்தின் பெயரில் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சுனந்தாவின் ரத்த மாதிரிகள், குடலில் இருந்த மாதிரிகள் அமெரிக்காவின் எப்ஃபிஐ அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. இவரின் மரணத்தின் காரணத்தை அறிவதற்காக அமெரிக்கா அனுப்பப்பட்டது.
• பொலோனியம் பாய்சன் காரணமாக இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சோதனைக்கு பின் வந்த எப்ஃபிஐ ரிப்போர்ட்டில் இவரின் மரணத்திற்கு பொலோனியம் பாய்சன் காரணம் இல்லை என்று கூறப்பட்டது.
• நவம்பர் 2015: டெல்லி போலீசார் மூலம் பத்திரிக்கையாளர் நளினி சிங்கிடம் உதவி கேட்கப்பட்டது. அவர்தான் சுனந்தாவிடம் கடைசியாக பேசிய நபர் என்பதால் அவரிடம் விசாரிக்கப்பட்டது.

விசாரணை
• பிப்ரவரி 2016: வழக்கில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சசி தரூரிடம் டெல்லி போலீசின் சிறப்பு விசாரணை படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
• மார்ச் 2016: இந்த வழக்கில் சசி தரூருடன் தொடர்பு உள்ளவராக பார்க்கப்பட்ட தாரார் என்ற பெண் டெல்லிக்கு வந்து சில முக்கிய அதிகாரிகளை சந்தித்தார். தனக்கும் தரூருக்கும் இடையிலான தொடர்பு குறித்து மறுத்தார்.
• ஜூலை 2017: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி இந்த வழக்கில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கும் தொடுத்தார்.
• அக்டோபர் 26, 2017: டெல்லி ஹைகோர்ட் சுப்பிரமணியன் சாமியின் மனுவை தள்ளுபடி செய்தது.
• ஜனவரி 2018: இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றம் சென்றார். இந்த மரண விசாரணை ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றஞ்சாட்டினார்.
• பிப்ரவரி 2018: டெல்லி போலீசிடம் சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டது.
• ஏப்ரல் 2018: இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், தற்காலிக அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
• மே 2018: டெல்லி போலீஸ் கடைசியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

சம்மன்
• மே 2018: அரசியல்வாதிகள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் சிறப்பு டெல்லி நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
• மே 2018: சசி தரூருக்கு சம்மன் கொடுப்பது தொடர்பான உத்தரவை தள்ளி வைத்தது.
• ஜூன் 2018: சசி தரூருக்கு எதிராக நிறைய புகார்கள் இருப்பதாலும், அவரை விசாரிக்க முகாந்திரம் உள்ளதாலும், அவருக்கு சம்மன் அளிப்பதாக கூறி டெல்லி சிறப்பு கோர்ட் சசி தரூருக்கு சம்மன் அனுப்பியது.
• ஆகஸ்ட் 2019: வழக்கு விசாரணை சூடு பிடித்தது. டெல்லி போலீஸ் இந்த வழக்கை கொலை அல்லது தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வகையில் கொண்டு சென்றது. அரசு தரப்பும் இதே வாதங்களை முன் வைத்தது.
• ஜூலை 2021: டெல்லி போலீஸ் மற்றும் அரசு சார்பாக வழக்கறிஞர் அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்டு வந்தார். சசி தரூர் சார்பாக இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா ஆஜராகி வாதிட்டு வந்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் கடந்த விசாரணையின் முடிவில் அரசு தரப்பு மற்றும் சசி தரூர் தரப்பு வாதங்கள் முடிவடைந்தன. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயால் இன்று வழக்கில் இருந்து சசி தரூரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications