இந்தி புரியலை- உச்சநீதிமன்றத்தின் வழக்காடு மொழி ஆங்கிலம்- இந்தியில் வாதாடியவருக்கு நீதிபதிகள் பதில்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இந்தியில் வாதாடிய நபரிடம், வழக்காடு மொழி ஆங்கிலம்தான் என அழுத்தம் திருத்தமாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து இந்தியில் வாதாடிய மனுதாரருக்கு உதவ வழக்கறிஞரை நியமித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம். ஜோசப், ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மனுதாரராக வாதாடிய முதியவர் சங்கர் லால் சர்மா என்பவர் தமது வாதங்களை இந்தியில் முன்வைத்தார். அப்போது தாம் பல நீதிமன்ற படிகளேறிவிட்டதாகவும் எங்கும் நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் இந்தியில் பேசினார்.

இந்தி புரியலை.. நீதிபதிகள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கே.எம். ஜோசப், உங்களது மனுவை படித்து பார்த்தோம். ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீதிமன்றங்களில் வழக்காடு மொழி ஆங்கிலம். நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உதவ வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறோம் என்றார்.

இந்தியில் பேசியவருக்கு உதவ வக்கீல் நியமனம்
இதனைத் தொடர்ந்து வேறு ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான், நீதிபதிகள் இந்தியில் புரியவில்லை என கூறியதை மொழிபெயர்த்து சங்கர் லால் சர்மாவிடம் தெரிவித்தார். அத்துடன் உதவி செய்ய வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கவும் நீதிபதிகள் தயார் என தெரிவித்ததையும் சர்மாவிடம் மாதவி தவான் கூறினார். பின்னர், நீதிபதிகளின் ஆலோசனையை மனுதாரர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவரை இந்தியில் பேசிய சங்கர் லால் சர்மாவுக்கு உதவ நீதிபதிகள் நியமித்தனர். இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தி திணிப்பு
இந்தியாவில் இந்தி மொழி என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டும் பேசப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தாய்மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் பொதுவான அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசுகள், இந்தி மொழிக்கு முன்னுரிமை தருவதும் இந்தியை அலுவல் மொழியாக திணிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தி திணிப்பு போராட்டங்கள்
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்டவை இந்தி மொழி திணிப்புக்கு எதிரான இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அந்த மாநிலங்களின் தாய்மொழிதான் இருக்க வேண்டும் என்பது நீண்ட்கால கோரிக்கை.












Click it and Unblock the Notifications