தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு தன்னிச்சையாக நியமிக்க முடியாது- உச்சநீதிமன்றம் அதிரடி!
தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க குழு ஒன்றை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு தன்னிச்சையாக நியமிக்க முடியாது; பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், இதர தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தனி அமைப்பு தேவை என்பது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுக்கள். இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தது.

இந்த விசாரணையின் போது கடந்த ஆண்டு, தலைமை தேர்தல் ஆணையர் பதவிக் காலம் 6 ஆண்டுகள். ஆனால் பொதுவாகவே தலைமை தேர்தல் ஆணையர் என்பவர் 2 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பது இல்லை. குறுகிய கால பதவிதான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என சுட்டிக்காட்டி இருந்தது. அத்துடன் 18 ஆண்டுகளில் 14 தலைமை தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் அதிருப்தியை தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. அதாவது, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்; சிபிஐ இயக்குநர் தேர்வைப் போல வெளிப்படையாக தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர், லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியொர் அடங்கிய குழு தேர்வு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மேலும் சட்டத்தின் ஆட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். அப்படி தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்காத போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானதாகிவிடும். ஒருவர் சுதந்திரமாக இருந்தால், செயல்பட்டால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கமாட்டார். அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவராக இருப்பவரால் சுதந்திரமாகவும் செயல்படவும் முடியாது. தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமானதாக செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஏனெனில் ஜனநாயகம் என்பது மக்கள் சக்தியுடன் இணைந்தது. வாக்கு சீட்டு என்பது மிகவும் வலிமையான சக்தி வாய்ந்தது. பலம் வாய்ந்த கட்சிகளை வீழ்த்தக் கூடிய வல்லமை கொண்டது. ஜனநாயகம் என்றால் தேர்தலில் தூய்மை முக்கியம். தூய்மை காக்கப்பட்டாத போது பேரழிவு ஏற்படும். கடும் விளைவுகளுக்கு வழி ஏற்படுத்தும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications