சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு மனு தாக்கல்!
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முன்வந்தது.
ஆனால் மத்திய அரசு தரப்பில், இந்தியாவின் உள்விவகாரங்களில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிடமுடியாது என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது:
சி.ஏ.ஏ. விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாக ஜெனிவா பிரதிநிதி தகவல் தெரிவித்திருந்தார். சி.ஏ.ஏ. விவகாரம் என்பது இந்தியாவின் உள்விவகாரம்.
என்ன மாதிரியான சட்டங்களை நிறைவேற்றுவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்டது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு அன்னிய சக்தியும் தலையிட முடியாது. சி.ஏ.ஏ. என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு போன்ற சுயேட்சையாக அமைப்புகள் மீது இந்தியாவுக்கு எப்போதும் மரியாதை உண்டு. இவ்வாறு ரவீஷ்குமார் கூறினார்.