பட்ஜெட் 2019 மீது பலத்த எதிர்பார்ப்பு.. கண்டிப்பாக இந்த அறிவிப்புகள் வருமாம்!
Recommended Video
டெல்லி: மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகரிப்பது, குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது, கிராமங்களில் கட்டமைப்பு திட்டங்களை அதிகரிப்பது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள், இன்றைய பட்ஜெட்டில் முக்கிய இடம் பிடிக்கும் என தெரிகிறது.
தொடர்ந்து, 2வது முறையாக மோடி அரசின், முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இதில் சில முக்கிய அம்சங்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம்.
வரி மாற்றம்
வரி அடுக்குகளை (Slab) மாற்றுவதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம், அதிகமான நுகர்வுக்கு ஊக்கமளிக்கலாம். இதில் தனி நபர்களுக்கான, வருமான வரி மாற்றமும் வரலாம். பல்வேறு கிராமப்புறம் சார்ந்த திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற வருவாய் பெருக்கத்திற்கு பட்ஜெட் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு தொழில், நீர்வளம்
'மோடி 2.0' பட்ஜெட்டின் முக்கிய நோக்கம், விவசாயம், சிறு குறு தொழில்கள் மற்றும் நீர்வளத்துறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பாஜக தேர்தல் அறிக்கை அடிப்படையில் தனி நபர் நுகர்வை அதிகரிக்க முன்னுரிமை கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவுப்பு ஒரு பக்கம் என்றால், தொழில்முனைவோருக்கு ரூ .50 லட்சம் வரை பிணையற்ற கடன்களை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய சீர்திருத்தம்
2022 க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி அறிவித்திருந்தார். எனவே, அந்த குறிக்கோளை அடைவதற்கான வகையில், விவசாய சீர்திருத்தங்கள் (ஒப்பந்த வேளாண்மை, சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்கள் போன்றவை) அறிவிக்கப்படலாம்.
நிதி வரத்து
கடந்த நிதியாண்டில் வராக் கடன்கள் குறைந்துவிட்டதால் வங்கித் துறையின் செயல்திறன் மேம்பட்டுள்ளது, ஆனால் மூலதனச் சந்தைகளில் இருந்து திரட்டப்பட்ட பணம் மற்றும் வங்கி சாராத நிதித்துறையில் உள்ள நெருக்கடி காரணமாக நிதி வரத்து தடைபட்டுள்ளன. இதற்கு தேவையான அறிவிப்புகள் இன்று வெளியாகலாம்.
உள்கட்டுமான துறை
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது மோடி அரசின் இந்த பட்ஜெட்டின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். நுகர்வோர் தேவையை அதிகரிப்பதற்கும், பொருளாதாரம் சார்ந்த கிராமப்புற சிக்கல்களை குறைப்பதற்கும் அரசு முன்முயற்சி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உள்கட்டுமான துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம். சிமென்ட், எஃகு மற்றும் கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளை தூண்டி வருமானம் மற்றும் நுகர்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குடிநீர் முக்கியம்
நாடு முழுக்க தட்டுப்பாடு இல்லாமல், குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும், நதிகளை இணைப்பதற்கும் முக்கியத்துவம் தரப்படலாம். "ஸ்வச் பாரத் மோடியின் முதல் பதவிக் காலத்தில் முக்கிய கவனம் பெற்றது. " நல் சே ஜல் "அவரது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் கவனம் பெற வாய்ப்புள்ளது" என்று கணிக்கிறது, எலாரா கேபிடல்.