புதிய தொற்றுகள் பரவுவதை தடுப்பூசிகள் முழுமையாக தடுக்காது - உலக சுகாதார நிறுவன நிபுணர் எச்சரிக்கை
டெல்லி: தடுப்பூசிகள் ஓமிக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்கும், அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் பரவுவதை முழுமையாக தடுக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய மண்டலத்தின் இயக்குனரான டாக்டர்.பூனம் கேட்ரபால் சிங் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிகளவில் உருமாற்றம், வேகமாக பரவும் திறன், தடுப்பூசிகளுக்கு எதிரான செயல்பாடு காரணமாக பல்வேறு உலகநாடுகள் தங்களது நாட்டில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் எல்லைகளையும் மூடியுள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த மக்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்ட நபர்களுக்கும் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதுவரை ஓமிக்ரான் தொற்று காரணமாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது ஆறுதலான தகவலாக உள்ளது.

தடுப்பூசிகள் குறித்து கேள்வி
ஓமிக்ரான் தற்போது பல நாடுகளில் பரவி வரும் நிலையில், தற்போது செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னி, ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்த புதிய வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து நீண்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகள் இதுகுறித்து குழப்பமான நிலையில் உள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் அதிகளவு பரவி வரும் நிலையில், தடுப்பூசி பயன்பாடு மற்றும் செயல்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

உலகசுகாதார நிறுவனம் விளக்கம்
தடுப்பூசிகளின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் சிங், தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும் ஓமிக்ரான் தொற்று பதிவாகியிருப்பதால், "தடுப்பூசிகள் உங்கள் நோய்த்தொற்றுக்கான வாய்ப்பைத் தடுக்கும் அதே வேளையில், அவை அதை முழுவதுமாகத் தடுக்காது என்பதை அறிவது முக்கியம். இது எல்லா வகைகளுக்கும் பொருந்தும்" என கூறியுள்ளார்.

புதிய தொற்றுகளை தடுக்காது
கொரோனா தற்போது பல பிறழ்வுகளாக உருவெடுத்து வரும் நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தடுப்பூசியின் மூலம் விடுபட்டு வருகிறது. தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், ஓமிக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்கும். அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் பரவுவதை முழுமையாக தடுக்காது என்பதை அறிவது முக்கியம் எனவும், மிதமான மற்றும் கடுமையான நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள நபர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர், மேலும் அவர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் வழங்கப்பட வேண்டும் என பூனம் கேட்ரபால் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

இறப்புக்கு எதிரான பாதுகாப்பு
பெரியவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அடிப்படை முன்களப் பணியாளர்கள் ஆகிய அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஓமிக்ரானில் பல பிறழ்வுகளைக் கருத்தில் கொண்டு, தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான நோய்கள் மற்றும் இறப்புகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன என்று கருதுவதே நியாயமானது என பூனம் கேட்ரபால் குறிப்பிட்டார்












Click it and Unblock the Notifications