அமெரிக்கா டூ பிரிட்டன் ஆட்டம் காணும் பொருளாதாரம்.. உறுதியாக இருக்கும் இந்தியன் எக்கனாமி.. பின்னணி
டெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர், சீனாவில் நீடிக்கும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் என பல காரணங்களால் உலக அளவில் பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிறது. அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் ஓரளவு நிலையானதாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

பிரிட்டனின் நிலை
சர்வதேச பொருளாதாரத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கூட சில பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இது எந்த அளவுக்கு சீரியஸான மேட்டர் எனில், புதிதாக பதவியேற்ற பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது முதல் உரையில், "பிரிட்டனை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பேன்" என்று கூறியுள்ளார். இதிலிருந்து பொருளாதார நெருக்கடி எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

ஐரோப்பாவின் நிலை
ரஷ்யா-உக்ரைன் போர் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரித்துள்ளது. இது சங்கிலி தொடராக இதர விலைகளையும் பாதித்துள்ளது. அமெரிக்காவும் இதேபோல நெருக்கடியினை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா அப்படியல்ல. இந்தியாவின் பொருளாதாரம் ஓரளவு நிலையானதாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் நிலை
இந்தியாவின் இந்த ஆண்டு வளர்ச்சி 7 சதவிகிதத்தை கடக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா இதுபோன்ற நெருக்கடிகளையெல்லாம் சந்திக்காமல் இருந்ததில்லை. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில், பொது முடக்கத்தின்போது நிலைமை மிக மோசமானதாக இருந்தது. இந்தியாவின் பொருளாதாரம் அவ்வளவுதான் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு ஏற்றாற்போல் சில்லறை வர்த்தகம் முற்றிலுமாக வீழ்ச்சியை சந்தித்தது.

மீட்சி
ஆனால் இதற்கடுத்த ஆண்டுகளில் அதிகரித்த பொது முதலீடு, கடனாளிகளுக்கு நிவாரணம் மற்றும் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்த மீட்சியிலிருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்ப உதவியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை பகைத்துக்கொண்டிருந்த நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்கியதன் காரணமாக இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பெரிதும் உதவியதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர்
இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், 250 ஆண்டுகள் நம்மை ஆண்டவர்கள் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர். நாம் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த வாரம் வெளியான பொருளாதார புள்ளிவிவரங்களின் படி இந்தியாவின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பொருளாதாரம் 13.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தது. ஆனால் இதன் இலக்கு 15 சதவிகிதமாக இருந்தது.

மூடிஸ் நிறுவனத்தின் கணிப்பு
எப்படியாயினும் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நாடு முன்னேறுவதே நோக்கமாக இருக்கிறது என ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். முன்னதாக நடப்பாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவிகிதமாக இருக்கும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. இதற்கு முன்னர் 8.8 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனது கணிப்பிலிருந்து 1 சதவிகிதத்தை மூடிஸ் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications