இன்று சர்வதேச எழுத்தறிவு நாள்...ஏன்...எதற்காக...முக்கியத்துவம் என்ன?
டெல்லி: கல்வியறிவு என்பது மனித சமுதாயத்துக்கு கிடைக்கும் கவுரவம். சமுதாயத்துக்கு மட்டுமின்றி தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் கவுரவமிக்கது. இதை உணர வைக்க வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டதுதான் சர்வதேச எழுத்தறிவு நாள்.
முதன் முதலாக ஒவ்வொரு மனிதருக்கும் எழுத்தறிவு முக்கியம் என்று யுனெஸ்கோ 1966ல் உணர்ந்து இருந்தது. உலகில் இன்னும் மில்லியன் கணக்கில் கல்வியறிவற்றவர்கள் உள்ளனர். இதனால் தேசிய கல்வி கொள்கையை மாற்ற வேண்டியது அவசியம். மக்களுக்கு எழுத்தறிவு மூலம் உண்மையான விடுதலை கிடைக்க வேண்டும்.
உலகெங்கிலும் இருக்கும் கல்வி முறைகள் மூலம் குழந்தைகள் மற்றும் உழைக்கும் பெரியவர்களுக்கு தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும், இதன் மூலம் அவர்கள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். தேசிய கல்வித் திட்டங்களில் குழந்தைகளுக்கான பள்ளிப்படிப்பு மற்றும் பெரியவர்களுக்கு கல்வியறிவு பயிற்சி ஆகியவை இணையான கூறுகளாக இருக்க வேண்டும் என்று அப்போது யுனெஸ்கோ வலியுறுத்தி இருந்தது.
இதையடுத்து 1967ல் செப்டம்பர் 8ஆம் தேதி முதன் முறையாக சர்வதேச எழுத்தறிவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் இன்னும் உலகம் முழுவதும் 773 மில்லியன் மக்கள் எழுத்தறிவு இன்றி இருப்பதாக யுனெஸ்கோ வருத்தம் தெரிவித்துள்ளது.
கல்வியறிவு...முதலிடத்தில் கேரளா...பின்தங்கிய ஆந்திரா... 8வது இடத்தில் தமிழ்நாடு!!
நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக கல்வி கற்பித்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. அதாவது, ஆன்லைன் கல்வி என்ற முறை உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. டிவி அல்லது ரேடியோ மூலமும் கற்பித்தல் நடந்து வருகிறது. திறந்த வெளியிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோவின் கல்வி உதவி இயக்குனர் ஜெனரல் குயின் டாங்க் அளித்திருக்கும் பேட்டியில், ''2030ஆம் ஆண்டில் அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி அளிப்பதுதான் எங்களது நோக்கமே. கடந்த 50 ஆண்டு காலத்தில் நேபாளம், வங்கதேசம், இந்தியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் முதியவர்களிடமும் எழுத்தறிவு அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எழுத்தறிவு 2011ஆம் ஆண்டில் 74.04 சதவீதமாக இருக்கிறது. 2001-11 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் 9.2 சதவீதம் எழுத்தறிவு அதிகரித்துள்ளது. இந்தியா முழு கல்வியறிவு பெறுவதற்கு இன்னும் 50 ஆண்டுகள் அதாவது 2060ல்தான் அடையும் என்று தெரிவித்துள்ளது.