விபத்தில் உயிரிழந்த ஊழியர்.. தவிக்கும் மனைவி, குழந்தை.. சொமேட்டோ நிறுவனம் செய்த பேருதவி!
டெல்லி: இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்று 'சொமேட்டோ'. இந்த நிறுவனத்தில் நாடு முழுவதும் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு!
தலைநகர் டெல்லியில் சொமேட்டோ நிறுவனத்தில் உணவு விநியோக ஊழியராக வேலை பார்த்து வந்தவர் சலில் திரிபாதி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியின் ரோகினியின் புத் விஹார் பகுதியில் உணவு ஆர்டரை வழங்குவதற்காக நின்று கொண்டிருந்தார்.
சொமேட்டோ நிறுவன ஊழியர் உயிரிழப்பு
அப்போது வேகமாக வந்த போலீஸ் வாகனம் ஒன்று சலில் திரிபாதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். உயிரிழந்த சலில் திரிபாதிக்கு மனைவியும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளார். திடீர் மறைவால் சலில் திரிபாதி மனைவியும், குழந்தையும் உடைந்துபோய் விட்டனர்.
நிறுவனம் செய்த பேருதவி
இந்த நிலையில் சலில் திரிபாதியின் குடும்பத்துக்கு சொமேட்டோ நிறுவனம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிறுவனர் தீபிந்தர் கோயல், ''துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் எங்கள் டெலிவரி பார்ட்னர் சலில் திரிபாதி இறந்ததால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அவர் குடும்பத்திற்கு உதவ நாங்கள் எல்லா ஆதரவையும் வழங்குகிறோம். விபத்து நடந்த இரவு முதல் எங்களின் நிறுவன குழு அவரின் குடும்பத்தினருடன் உள்ளது.
மனைவிக்கு வேலை
சலில் திரிபாதி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டு மானியத்துடன் உதவியுள்ளோம். அவரின் இறுதிச் சடங்குகள் உட்பட குடும்பத்தின் சில செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், சொமேட்டோ வெளியிட்ட அறிக்கையில், ' இந்த துயரமான நேரத்தை கடந்த பிறகு, சலிலின் மனைவி சுசேதாவுக்கு ஒரு வேலையை வழங்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வோம், இதனால் அவர் குடும்பத்தை நடத்த முடியும், மேலும் அவரது 10 வயது மகனின் கல்விக்கு ஆதரவளிக்க முடியும்.
நெட்டிசன்கள் பாராட்டு
இவற்றை தவிர, குடும்பத்தின் எதிர்காலத்திற்காக, Zomato ஊழியர்கள் கூட்டாக ரூ.12 லட்சத்தை வழங்கியுள்ளனர்... இந்த கடினமான நேரத்தில் தேவைப்படும் நிதி மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம் 'என்று சொமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது. வெறுமனே இரங்கலுடன் நிறுத்தி விடாமல் ஊழியர் குடும்பத்துக்கு சொமேட்டோ நிறுவனம் செய்த உதவிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்தனர்.