உண்மையை உடைத்துப் பேசிய கே.என்.நேரு! தர்ம சங்கடத்தில் செந்தில்பாலாஜி! என்ன தான் பிரச்சனை?
திண்டுக்கல்: ஆழியாறு குடிநீர் திட்டத்தை கைவிடவில்லை என்றும் ரூ.950 கோடியில் பணிகளை தொடங்கிவிட்டு எப்படி நிறுத்த முடியும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு வினவியுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு உண்மையை உடைத்து பேசியதால் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
காரணம் திருப்பூர், பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதேயாகும்.

ஆழியார் திட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ல ஆழியாறில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என இதில் மிகத் தீவிரம் காட்டினர். அதுமட்டுமல்லாமல் ஆழியாறு திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்நிலையில் அண்மையில் கோவைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே, ஆழியாறு திட்டத்தை சிலர் வேண்டுமென்றே தூண்டி விடுவதாக கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்த முன்வராது எனப் பேசி போராட்டக்காரர்களை ஆஃப் செய்து வைத்தார். ஆனால் இது தொடர்பாக முதல்வர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது கவனிக்கத்தக்கது.

அமைச்சர் கே.என்.நேரு
இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ஆழியாறு குடிநீர் திட்டத்தை கைவிடவில்லை என்றும் ரூ.950 கோடியில் பணிகளை தொடங்கிவிட்டு எப்படி நிறுத்த முடியும் எனவும் உண்மை நிலவரத்தை உடைத்துப் பேசினார். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வருவதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

சமாதானம் செய்வோம்
இதனால் ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கேன்சல் செய்யவில்லை என மிகத் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இது பரம்பிக்குளம் ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை மீண்டும் போராட்டங்களுக்கு தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதனிடையே விவசாயிகளை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாகவும் அமைச்சர் நேரு கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications