1957ம் ஆண்டு முதல் தொடரும் 'வேடசந்தூர் சென்டிமெண்ட்'.. ஆட்சியை பிடித்த திமுக
திண்டுக்கல்: 1957ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கிறது வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற சென்டிமெண்ட் இப்போது வரை தொடர்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 128834 பேர். பெண் வாக்காளர்கள் 134425 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் என மொத்தம் 263262 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதி கடந்த 1952 முதல் 2016ம் ஆண்டு வரை 15 முறை சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. 1952ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட மதனகோபால் வெற்றி பெற்றார். அப்போது மட்டுமே இத் தொகுதியில் வெற்றி பெற்றவர் எதிர்க்கட்சியாக இருந்துள்ளார்,.
திமுக வெற்றி
ஆனால் அதன்பிறகு 1957, 1962களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியமைத்தது. 1967, 1971ம் ஆண்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுகவே ஆட்சியமைத்தது. 1977, 1980, 1984ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுகவே தமிழகத்தில் ஆட்சியமைத்தது.
திமுக அதிமுக ஆட்சி
1989களில் வேடசந்தூரில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுகவே ஆட்சியமைத்தது. 1991ல் வேடசந்தூரில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் அதிமுகவே ஆட்சியமைத்தது. 1996ல் திமுகவும், 2001ல் அதிமுகவும், 2006ல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் வென்றது. திமுக ஆட்சியை பிடித்தது. இதேபோல் 2011 மற்றும் 2016ல் அதிமுக கூட்டணி வென்றது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைத்தது.
வேடசந்தூரில் வெற்றி
இதனால் தமிழக சட்டசபை தொகுதிகளில் வேடசந்தூர் தொகுதி சிறப்பு அம்சம் பெற்று சென்டிமென்ட் தொகுதியாக விளங்கி வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
திமுக ஆட்சி
திமுக சார்பில் போட்டியிட்ட காந்திராஜன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரமசிவத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுக தற்போது மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. 64 வருடங்களாக வேடசந்தூரில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற சென்டிமெண்ட் தொடர்கிறது.