'மனிதாபிமானத்துக்கான' 'நோபல்' பரிசை சுஷ்மா சுவராஜுக்குத் தான் தர வேண்டும்!
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி லலித் மோடி. இங்கிலாந்துக்கு ஓடிப் போய் தலைமறைவாக இருப்பவர்.. இவரது மனைவி சிகிச்சை பெறுவதற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதாக 'பிரகடனம்' வெளியிட்டிருக்கிறார் இந்தியாவின் மாட்சிமை தாங்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்...
சுஷ்மா ஸ்வராஜின் இந்த மனிதாபிமானமும் மனிதநேயமும் நியாயமானதே.. லலித் மோடிக்குதானே உதவி செய்தார்.. தாவூத் இப்ராஹிமுக்கா சுஷ்மா உதவி செய்தார்? என அவரது தாய் அமைப்பான அனைத்து இந்துத்துவா சங் பரிவாரங்களும் அவருக்காகவே சங்கநாதம் எழுப்பி யுத்த களத்தில் நிற்கின்றன..
'மனிதாபிமான' அடிப்படையில் உதவியதாக சொல்லும் சுஷ்மா அவர்களே! உங்களுக்கு மனசாட்சி என ஒன்றிருந்தால் தொட்டு சொல்லுங்கள்..
உங்களது கணவர் 22 ஆண்டுகாலம் லலித் மோடிக்கு வழக்கறிஞர் அல்லவா?
உங்களது மகளும் கூட 'தேடப்படும் குற்றவாளி'யான லலித் மோடிக்கான வழக்கறிஞர்தானே?
இந்த வழக்கறிஞர் 'தொழில்களும்' 'பணத்துக்கானது' மட்டும்தான்.. இதனடிப்படையில்தான் லலித் மோடிக்கு உதவி இருக்கிறீர்கள்..
அப்புறம் ஏன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டும்? முழுக்க நனைந்துவிட்ட பிறகு முக்காடு எதற்கு? மனிதாபிமானி வேஷம் எதற்கு? வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி எதற்கு?
இவை ஒருபுறம் இருக்கட்டும்..
இந்த ஆண்டின் 'மனிதாபிமானத்துக்காக' நோபல் பரிசுக்கு சமூகவலைதளங்களில் அதிகளவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள, 'மோடி சர்க்காரின் மூத்த அமைச்சர் சுஷ்மா' அவர்களே!
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் குறித்தோ...
இந்தியாவின் குடிமக்களாக இருந்தபோதும் ஏதோ வேற்றுகிரகவாசியைப் போல வங்கக் கடலில் இலங்கையால் வேட்டையாடப்படும் தமிழக மீனவர்கள் பற்றியோ
இந்தியாவில் ஆயுள் தண்டனையை அனுபவித்த பின்னரும் விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிற பல்லாயிரக்கணக்கான சிறைவாசிகள் மீதோ...
இன்னமும் இன்னமும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மலைகிராமங்களில் முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள் மீதோ...
லலித் மோடியைப் போல பல்லாயிரம் கோடியை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி தலைமறைவாக இல்லாமல்
இந்தியாவின் அனுமதியுடன் வயிற்றுப் பிழைப்புக்காக ஈராக்குக்குப் போய் ஓராண்டுக்கும் மேலாக உயிரோடு இருக்கிறார்களா என தெரியாமல் இருக்கும் 39 இந்தியர்கள் மீதோ....
வளைகுடா நாடுகளில் எல்லை தாண்டிவிட்டார்கள் என்ற ஒற்றை குற்றத்துக்காக சுட்டுப் படுகொலை செய்யப்படுகிற- சிறையில் ஆண்டுகள் கணக்கில் வாடுகிற இந்தியர்கள் பற்றியோ
ஆகக் குறைந்தபட்சம்
கூடங்குளத்தில் வாழ்வுரிமைக்காக போராடியதால் வயிற்றுப் பிழைப்புக்கு வெளிநாடு செல்ல முடியாத நிலையில் பாஸ்போர்ட்டை உங்கள் மத்திய பேரரசிடம் பறிகொடுத்து நிற்கும் சில நூறு தமிழர்கள் பற்றியோ
உங்களது 'மனிதாபிமான' பேருள்ளம் எப்போது அக்கறைப்படுமாம்?
நிச்சயம் ஒரு நொடியேனும் அக்கறைப்படப் போவதில்லைதான்..
ஒன்றைமட்டும் நினைவில் கொள்ளுங்கள் இவர்கள் அத்தனைபேரும் கட்டுகிற வரி என்னுகிற கப்பத்தில்தான் உங்களுக்கான ஊதியமும் உல்லாச உப்பரிகைகளும் கிடைக்கிறது அம்மையார் அவர்களே!
இந்த நாட்டின் நீதிபரிபாலனத்தை, உண்மை மனிதாபிமானத்தை சுயநலனுக்காக குழிதோண்டி புதைத்துவிட்ட நீங்கள் மத்திய அமைச்சர் பதவியில் நீடிப்பதை ஜனநாயகம் நிச்சயம் ஒருபோதும் மன்னிக்காது !!