'கொலை' செய்யவந்த பேய்கள்.. இளைஞரின் புகாருக்கு.. தீவிர விசாரணை நடத்திய குஜராத் போலீஸ்..? என்ன ஆச்சு
காந்திநகர்: குஜராத்தில் இரண்டு பேய்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக 35 வயது இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையும்கூட ஏற்று போலீசார் வழக்குப்பதிவும் செய்து விசாரித்துள்ள சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
உலகில் 2ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் பல விசித்திரங்கள் நடப்பது வழக்கம். நம் நாட்டில் சில சமயங்களில் ஆடு, நாய் போன்ற விலங்கள் மீது கூட வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், குஜராத் மாநிலத்தில் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பரபரத்த நபர்
குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷங்பாய் பாரியா. 35 வயதான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை வேர்க்க விறுவிறுக்க அரங்குள் போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். பார்க்கவே மிகவும் பயந்திருந்தார். இதனால் போலீசார் அவரை அமர வைத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர் கூறிய கதையைக் கேட்டு போலீசாருக்கே ஒரு நிமிடம் தலை சுத்தி விட்டது.

பேய்கள் தான் காரணம்
அதாவது கடந்த சில வாரங்களாகவே பேய்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக அவர் தெரிவித்தார். மொத்தம் இரண்டு பேய்கள் துன்புறுத்துவதாகவும் அவை தன்னை கொல்லப் போவதாக மிரட்டுவதாகவும் அவர் அச்சத்துடன் கூறினார். முதலில் போலாசாருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து வலியுறுத்தியதால் புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

யார் இவர்
ஆனால், அதன் பின்னரே 35 வயதான வர்ஷங்பாய் பாரியா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டுள்ள வர்ஷங்பாய் பாரியா அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் திடீரென போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவரது சகோதரர் மகேஷ் பாரியா தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களாக அவர் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அதனால் தான் இப்படி நடந்துகொண்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் கூறுவது என்ன
இந்தச் சம்பவத்தை போலீசாரும் உறுதி செய்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இரண்டு பேய்கள் தன்னை அச்சுறுத்தியதாக அவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்தச் சூழலில் வேறுவழியின்றி நாங்கள் வழக்குப்பதிவு செய்தோம். அவரது குடும்பத்தினருடன் பேசிய பின்னரே அவரின் நிலை எங்களுக்குத் தெரியவந்தது. நல்ல ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினோம். மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்












Click it and Unblock the Notifications