நான் தான் ‛‛எம்ஜிஆர்’’.. தமிழக அரசியலை பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.. பின்னணி இதுதான்
ஹைதராபாத்: தமிழ்நாட்டில் அதிமுக கட்சியை துவங்கி முதலமைச்சராக அரியனையில் அமர்ந்த எம்ஜிஆரை நினைவு கூர்ந்து அவருடன் தன்னை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒப்பிட்டு பேசினார். இந்த வேளையில் ஆந்திராவின் எதிர்க்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக அக்கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னபேட்டையில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார். அதன்பிறகு அவர் பேசினார்.
தேவருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது அதிமுக தான்! எம்ஜிஆரை போல எடப்பாடி... ராஜன் செல்லப்பா பளீச்
எம்ஜிஆருடன் ஒப்பிட்ட ஜெகன்மோகன் ரெட்டி
அப்போது ஜெகன்மோகன் ரெட்டி தன்னை தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேசினார். இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: ஒருவர் சொந்தமாக கட்சி துவங்கி சொந்த உழைப்பில் ஆட்சிக்கு வந்தால் அவர் எம்ஜிஆர் அல்லது என்டிஆர்(ஆந்திர முன்னாள் முதல்வர்) அல்லது ஜெகன் என அழைக்கப்படுவார்'' என எம்ஜிஆர், என்டிஆருடன் சேர்ந்து அவர் தன்னை ஒப்பிட்டு கொண்டார்.
சந்திரபாபு நாயுடு மீது விமர்சனம்
அதேநேரத்தில், ‛‛நீங்கள் ஒரு அரசியல் கட்சியை அபகரித்து மாமனாரிடம் இருந்து முதலமைச்சர் நாற்காலியை பறித்து கொண்டால் சந்திரபாபு நாயுடு என அழைக்கப்படுவார். இவர் முதுகில் குத்தும் நபராக உள்ளார்.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைவர்கள் நிறைவேற்றுவது தான் உண்மையான ஜனநாயகமாகும். வாக்குறுதிகள் வழங்கிவிட்டு நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றும் நபர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற மக்கள் வாய்ப்பு வழங்க கூடாது. இதனை நன்றாக மக்கள் சிந்திக்க வேண்டும்'' என சந்திரபாபு நாயுடுவை அவர் விமர்சனம் செய்தார்.
காரணம் என்ன?
தமிழகத்தில் எம்ஜிஆர், ஆந்திராவில் என்டிஆர் ஆகியோர் திரைத்துறையில் கொடிக்கட்டி பறந்தனர். எம்ஜிஆர் திமுகவில் செயல்பட்டு வந்த நிலையில் புதிதாக அதிமுகவை துவங்கி தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்று முதலமைச்சரானார். இதேபோல் என்டிஆர் ஆந்திராவில் 1983ல் தெலுங்குதேசம் எனும் கட்சியை துவங்கி முதல் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதலமைச்சரானார். இதேபோல் தான் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பொறுப்பு மறுக்கப்பட்ட நிலையில் வெளியேறிய ஜெகன் மோகன் ரெட்டி புதிதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை துவங்கி 2014 தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராகவும், 2019ல் முதலமைச்சராகவும் வெற்றி பெற்றார். இதனால் தான் அவர் எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோருடன் தன்னை ஒப்பிட்டு கொண்டார்.
யார் இந்த சந்திரபாபு நாயுடு?
அதேவேளையில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் மருமகன் ஆவார். மாமனாரான என்டிஆரின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு ஆகி முதலமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் வரலாற்றில் இல்லாத வகையில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தான் தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றி தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்ததாக தான் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.