ம.பி.யி. 10ம் வகுப்பு படிக்கும் 114 வயது மாணவி... கணினியால் விளைந்த குழப்பம்
போபால்: மத்தியப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் மதிப்பெண் சான்றிதழில் அவரின் வயது 114 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அம்மாநிலத்தின் தாமோத் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்த மாணவி ஒருவரின் மதிப்பெண் சான்றிதழில் தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிறந்தவர் அம்மாணவி. ஆனால், மதிப்பெண் சான்றிதழில் தவறுதலாக 1900ம் ஆண்டு எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது பதினான்கு வயதாகும் அம்மாணவியின் வயது சான்றிதழ் கணக்குப்படி 114 எனத் தவறாகக் காட்டுகிறது.
மேலும், அம்மாணவியின் தந்தை பெயர் பஜேந்திர சிங் தாகூர் பெயரும் தவறாக பஜேந்திர குமார் என பதிவாகியுள்ளது. மதிப்பெண் சான்றிதழில் பதிவாகியுள்ள இத்தவறான தகவல்களால் அம்மாணவிக்கு தனது மதிப்பெண்களும் ஏதேனும் தவறாகப் பதியப் பெற்றிருக்குமோ என்ற சந்தேகம் உண்டானது.
உடனடியாக இத்தவறுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாணவியின் தரப்பில் இருந்து புகார் அனுப்பப்பட்டது. அதில் மதிப்பெண் சான்றிதழில் உள்ள தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றும் தனது மதிப்பெண்கள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.