பஞ்சாப் பொற்கோவிலில் வாள், ஈட்டிகளுடன் கடும் மோதல்- 12 பேர் படுகாயம்
அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர் பொற்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மத்திய அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரிய போராளிகள் கொல்லப்பட்டனர்.
இதன் 30ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவிலை நிர்வகித்துவரும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் சிரோன்மணி அகாலிதளம் மான் பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரும் வாள், கத்தி, ஈட்டி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களமானது.
இம்மோதலில் மொத்தம் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அமிர்தசரஸ் நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.