கந்தகார் விமான கடத்தல் வழக்கு: தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட யூசுப் விடுதலை
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி காத்மாண்ட் நகரிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஐ.சி.- 814 லக்னோ மீது பறந்து கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. பின்னர் கந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் அங்கு ஐந்து நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
சிறை பிடிக்கப்பட்ட விமானத்தை விட வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். திவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு தீவிரவாதிகளை விடுவித்தது. இதையடுத்து, விமானத்தை தீவிரவாதிகள் விடுவித்தனர்.
இந்நிலையில், விமானத்தை கடத்திய தீவிரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தது, போலி பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தது, டிக்கெட் எடுத்துக் கொடுத்தது, ஆயுதங்கள், வெடிபொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அப்துல் லத்தீப் ஆதம் மொமீன், யூசுப் நேபாளி, தலிப் பூஜைல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்னர். அவர்களுக்கு பாட்டியாலா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எனினும், சி.பி.ஐ அவர்களுக்கு மரண தண்டனையை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியது.
ஆனால், கடந்த 1999ம் ஆண்டு முதல் சிறைக்காவலில் உள்ள மொமீன், யூசுப், பூஜைல் ஆகிய மூவர் மீதும் சி.பி.ஐ. போதுமான ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, யூசுப் நேபாளியை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளதாக பாட்டியாலா உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளியன்று மாலை 6.30 மணி அளவில் பாட்டியாலா மத்திய சிறையில் யூசுப் நேபாளி விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த யூசுப், ‘நான் விமான கடத்தலில் ஈடுபடவில்லை. ஆனாலும், 14 வருடங்களை சிறையில் கழித்துள்ளேன். அந்த காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர்கள் இறந்துவிட்டனர். என் மனைவி என்னை விட்டு விலகி சென்றுவிட்டார். நான் சிறையில் கழித்த வருடங்களை யார் திருப்பித் தர போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை'' என கண்ணீருடன் தெரிவித்தார்.