ஆந்திர அமைச்சரவையில் இருந்த இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா
ஆந்திர அமைச்சரவையிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
அமராவதி: ஆந்திர அமைச்சரவையிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்தனர்.
கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றது. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.
எனினும் மத்திய அரசு பிடிகொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நாயுடுவை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் மத்திய அரசு ஈடுபட்டது.

ஆந்திரா எம்பிக்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மத்திய அரசு மறுத்து விட்டது.

சந்திரபாபு முடிவு
இதையடுத்து பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று முதல்வர் முடிவு செய்தார். அதன்படி நேற்று இதற்கான அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

மத்திய தெலுங்குதேச அமைச்சர்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் இன்று ராஜினாமா செய்கின்றனர். அதுபோல் ஆந்திர அமைச்சரவையிலும் பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரு அமைச்சர்கள்
தேஜகூ - தெலுங்கு தேசம் கூட்டணி முடிவுக்கு வந்ததை அடுத்து ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன், மாணிக்யாலராவ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications