மும்பையில் பெண் பத்திரிக்கையாளரிடம் அசிங்கமாக நடந்த 2 வாலிபர்கள்
மும்பை: மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் அசிங்கமாக நடந்து கொண்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த 28 வயது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சக ஊழியர்களுடன் அந்தேரியில் இருந்து லோயர் பரேலில் உள்ள அலுவலகத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாகர் குப்தா(19), அர்மான் கான்(21) ஆகியோர் சென்ற ஸ்கூட்டி பத்திரிக்கையாளரின் வாகனத்தில் உரசியது. அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செல்ல அந்த வாலிபர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து பெண் பத்திரிக்கையாளரை பார்த்து அசிங்கமாக சைகைகள் செய்தனர். மேலும் அவரை அந்த வாலிபர்கள் திட்டியும் உள்ளனர்.
இதையடுத்து அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ய போலீசார் வந்து அந்த வாலிபர்களை கைது செய்தனர். மேலும் அவர் இரவு பணி பார்த்த பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிவிக்க 15 பேர் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டனர்.
இந்நிலையில் அந்த வாலிபர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 60 முதல் 70 பேர் வரை காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களில் அலாஸ் கான், அஸ்லம் மேனன், பயாஸ் அன்சாரி, ஷாநவாஸ் கான் மற்றும் ரியாஸ் கான் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கலகம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.