அமீரகத்துடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்த துபாய் சென்றுள்ள 3 இந்திய கடற்படை கப்பல்கள்
பெங்களூர்: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் டெல்லி, ஐஎன்எஸ் தார்காஷ், ஐஎன்எஸ் தீபக் ஆகிய மூன்று கப்பல்கள் 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளன.
ஐஎன்எஸ் டெல்லி, ஐஎன்எஸ் தார்காஷ், ஐஎன்எஸ் தீபக் ஆகிய கப்பல்கள் ரியர் அட்மிரல் ரவ்னீத் சிங் தலைமையில் துபாயை அடைந்துள்ளன. வளைகுடா நாடுகளுடனான கடல்வழித் தொடர்பை மேம்படுத்த இந்த பயணம் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்புறவை மேம்படுத்தவும் இந்த பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது இந்திய கடற்படையினர் அமீரக கடற்படையினரை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்திய கடற்படை கப்பல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் அமீரகம் சென்றன. கடந்த ஆண்டு ஐஎன்எஸ் டெல்லி, ஐஎன்எஸ் தீபக், ஐஎன்எஸ் த்ரிஷுல் மற்றும் ஐஎன்எஸ் தாபார் ஆகிய கப்பல்கள் அமீரகம் சென்றன.
வர்த்தகத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கூட்டாளி அமீரகம் ஆகும். மேலும் அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமீரகம் சென்று வந்தது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வரும் 18ம் தேதி அமீரகம் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.