பீகார் சட்டசபைக்கு அக்டோபர்- நவம்பரில் 4 கட்டமாக தேர்தல்?
டெல்லி: பீகார் மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் 4 கட்டமாக தேர்தல் நடைபெறக் கூடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை தலா 100 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியோ இம்முறை பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறது.
இதனிடையே பீகாரில் 4 கட்டமாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தளத்துக்கு தகவல் தெரிவித்த தேர்தல் ஆணைய வட்டாரங்கள், அக்டோபர் மாதத்தில் பீகாரில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கும்; அனேகமாக 4 கட்டங்களாக நவம்பர் வரை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. இது தொடர்பான தீவிர ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக கூடுதல் பாதுகாப்புப் படையினரை நிறுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூடுதல் எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகள் அமைத்து எளிதாக வாக்களிக்க வகை செய்வது; முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க இணையதளத்தில் வாக்களிப்பதை நேரடியாக ஒளிபரப்புவது ஆகிய நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.