ஈராக்கில் சிக்கிய மேலும் 58 செவிலிகள் மீட்பு
டெல்லி: ஈராக்கின் கலவரப் பகுதிகளில் இருந்து மேலும் 58 இந்திய செவிலியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், அங்கு சன்னி பிரிவினரிடம் மாட்டி தவித்து வரும் 39 கட்டுமானத் தொழிலாளர்களையும் மீட்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவர் வெளியிட்டுள்ள செய்தியில் 58 செவிலியர்களையும் மிகவும் ஆபத்துகள் நிறைந்த பகுதிகளில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஈராக்கில் உள்ள இந்திய அரசின் நண்பர்களாய் விளங்கியவர்களின் மூலமாகதான் அவர்களை மீட்டதாகவும், அவர்களுடைய பாதுகாப்பு கருதி மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிட இயலாது என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
இதற்கு முன்பாக 46 செவிலியர்களை திக்ரித்தில் இருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 150 இந்தியர்கள் தற்போது ஈராக்கின் போர் நடைபெறும் பகுதிகளில் மாட்டி தவித்து வருகின்றனர். மற்ற இடங்களில் 39 இந்தியர்கள் உள்ளனர் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
"இதற்கு மேல் எந்த விவரங்களையும் வெளியிட இயலாது. அதனால், இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் வேலைக்கு இடையூறு ஏற்படலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.
சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையேயான உள்நாட்டுக் கலவரம் துவங்கியபோது கிட்டதட்ட 10,000 இந்தியர்கள் ஈராக்கில் மாட்டி தவித்து வந்தனர்.
தற்போதைய கணக்கின்படி கலவரம் அற்ற பகுதிகளில் 6,500 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.