ஓய்வு பெறுகிறார் நசீம் ஜைதி.. புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நியமனம்
டெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மறுநாள் பதவியேற்கிறார்.
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் ஜைதி கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நாளை மறுநாள், அதாவது ஜூலை 6-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு தேர்தல் ஆணையர்களாக உள்ளவர்களையே நியமிப்பது வழக்கம்.
அதன்படி தேர்தல் ஆணையர்களாக உள்ள அச்சல்குமார் ஜோதி, ஓ.பி. ராவத் ஆகியோரில், அச்சல் குமார் மூத்தவர் என்பதாலும் அனுபவசாலி என்பதாலும் அவரை தலைமை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. அவர் 21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராகிறார்.
குஜராத் மாநில ஆணையராகவும், தலைமை செயலாளராகவும் இருந்தவர் அச்சல் குமார், 1975-ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தவர். அவர் தலைமையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய பதவிக்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
அதேபோல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்தை அவர் எவ்வாறு கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது காலியாகவுள்ள தேர்தல் ஆணையர் பணியும் விரைவில் நிரப்பப்படும்.