நிறுவனங்களுக்கு ஆதார் போல அடையாள அட்டையாம்.. காரணம் இதுதான் என்கிறார் அருண் ஜெட்லி
நிறுவனங்களுக்கு அடையாள அட்டை வழங்குவதன் மூலம் போலிகளை ஒழிக்க முடியும் என்று அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் போலி நிறுவனங்களை ஒழிக்கவும், பணப்பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் விவசாயம், கிராமப்புற சுகாதாரம் போன்றவற்றிற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் தொழில் நிறுவனங்களும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் மிக முக்கியமாக நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர், "ஒவ்வொரு நிறுவனத்துக்கும், அது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. எனவே நாட்டில் உள்ள நிறுவனங்கள் அனைத்துக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வரும்" என்று கூறினார்.
இதன் மூலம் பெயரளவில் இயங்கி வரும் போலி நிறுவனங்களை அழிக்கவும், முறையற்ற பணப்பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆதார் கார்டு மூலம் தனி மனிதர்களின் தரவுகளை முறைப்படுத்துவது போல, இந்த நிறுவனங்களுக்கான தனி அடையாள அட்டை மூலம் நிறுவனங்களையும் முறைப்படுத்த முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்யோக் ஆதார் என்கிற திட்டம் 2015ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4.1 மில்லியன் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், பணப்பரிமாற்றத்தின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவில் தொழில் வளர்ச்சி முறைப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications