ஆமிர்கான் விவகாரம்: தாண்டவன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து - ஆதித்யா தாக்கரே !
மும்பை: ஆமீர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு என சிவசேனையின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அவர் கூறிய கருத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சிவசேனாவின் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதால், தனது மனைவி, கிரண், வெளிநாடு போகலாம் என தன்னிடம் கூறியதாக, நடிகர் ஆமீர்கான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பு கிளம்பியது. சிலர் அவரது கருத்தை மட்டுமே பார்க்குமாறு ஆதரவு குரலையும் எழுப்பினர்.
இதனிடையே ஆமீர்கான், தான் நடித்துவரும் டன்கல் என்ற படத்தின் சூட்டிங்கிற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலின் வெளியே பஞ்சாப் சிவசேனையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சிவசேனையின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன் "ஆமீர்கானை அறைந்தால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும். இந்த ஹோட்டலின் மேனேஜரோ, அல்லது ஊழியரோ, திரைப்படத்தில் பணியாற்றும் ஊழியர்களோ கூட ஆமீர்கானை அடித்து ரூ.1 லட்சம் பரிசை பெற்றுக் கொள்ளலாம். தைரியமும், தேசப்பற்றும் கொண்ட இந்தியர்கள், ஆமீர்கானை லூதியானாவில் வைத்து அடித்து ரூ.1 லட்சத்தை பரிசாக பெறலாம்" என்று கூறினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனாவின் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, அந்த கருத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவசேனா கட்சிக்கு இந்த மாதிரியான விவகாரங்களில் தலையிட்டு விளம்பரம் தேடவேண்டியது இல்லை என தெரிவித்தார்.