ஆம் ஆத்மி ஸ்டைல்: சைரன் வேண்டாம்... பாதுகாப்பைக் குறையுங்கள் - மஹா. முதல்வர் அதிரடி
மும்பை: தனது காரில் சைரன் சுழல் விளக்கை அகற்றியதோடு, தன்னுடைய பாதுகாப்பையும் குறைத்துக் கொண்டுள்ளார் மஹாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவான்.
சமீபத்தில் டெல்லியில் பதவியேற்ற ஆம் ஆத்மி அரசு தங்களது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் காரில் சைரன் விளக்குகளைப் பயன்படுத்தப் போவதில்லை என முடிவு செய்தது. மேலும், தங்களுக்கு வழங்கப் பட்ட பாதுகாப்பையும் அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஆம் ஆத்மி ஸ்டைலில் பிற மாநிலங்களிலும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வலையில் மஹாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவானும் தனது காரில் சைரன் வசதி கொண்ட சுழல் விளக்கை அகற்ற உத்தரவிட்டுள்ளாராம்.
மேலும், தனது ‘‘இசட் பிளஸ்'' பாதுகாப்பையும் 20 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளார் அவர். இது குறித்து முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது :-
யார்- யார் தங்களது கார்களில் சைரன் வசதி கொண்ட சுழல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று சில நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் விதித்தது. அதன்படி முதல்வர் பதவி வகிப்பவர் சைரன் சுழல் விளக்கை பயன்படுத்த முடியும். ஆனால் இந்த வசதி தனக்கு தேவையில்லை என பிரிதிவிராஜ் சவான் முடிவு செய்துள்ளார்.
மேலும் அவர் ரகசிய கலாசாரத்தை விரும்பவில்லை. இதனால் ‘வர்ஷா' அலுவலத்தை போல மந்திராலயாவில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திலும் ரகசிய அறை வசதி இருக்காது' என்றார்.
முதல்வரின் இந்த நடவடிக்கையை முன்மாதிரியாக எடுத்து கொண்டு, அவரது அமைச்சர் சகாக்களும் இவற்றை கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.