11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... பட்டியலில் டாப் யார் தெரியுமா?
நாடு முழுவதும் உள்ள 31 மாநில முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஏடிஆர் அறிக்கை கூறுகிறது.
Recommended Video

டெல்லி : இந்தியாவில் உள்ள 11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் இடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ்.
ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பான ஏடிஆர் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை நடத்தி அதற்கான முடிவுகளையும் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களில் கிரிமினல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளோரின் பட்டியலை இந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது. மொத்தமுள்ள 31 மாநில முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது வழக்கு இருந்தாலும் 8 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.
மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திரஃபட்நாவிஸ் மீது 3 தீவிர கிரிமினல் வழக்குகள் உள்பட 22 வழக்குகள் உள்ளன. தாக்குதல் நடத்துவது, பயங்கர ஆயுதங்கள் கொண்டு சேதம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், பொது மக்களுக்கு சேவை செய்பவராக இருந்து கொண்டு தவறான நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குகள் உள்ளன.

பினராயி விஜயன் பட்டியலில் 2வது
கேரள முதல்வர் பினராயி விஜயன் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கிறார். சொத்துகளை மோசடி செய்தல், கலவரம் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளிட்ட 11 வழக்குகள் பினராயி விஜயன் மீது உள்ளது என்று ஏடிஆர் கூறுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் எத்தனையாவது?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிரிமினல் வழக்குகளை உடைய முதல்வர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடிகிறார். சட்டவிரோதமாக மக்கள் கூட்டத்தை கூட்டுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் அவதூறு வழக்கு என்று அரவிந்த் கெஜ்ரிவால் மீது 10 வழக்குகள் உள்ளன.

யோகி ஆதித்யநாத் மீதும் கிரிமினல் வழக்கா?
ஜார்க்கண்ணட் முதல்வர் ரகுபார் தாஸ் மீது 8 வழக்குகளும், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மீது 4 வழக்குகளும் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது 4 வழக்குகள் உள்ளன, ஆனால் இவை அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை. வழிபாட்டுத் தலங்களில் உள்நுழைதல்,இ கலவரத்தை ஏற்படுத்துதல், கல்லறைகளுக்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது உஉள்ளன.

சந்திரபாபு நாயுடு மீது எத்தனை வழக்குகள்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் 3 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால் இவை தீவிரமான வழக்குகளாக இல்லை. இதே போன்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீதும் தலா 2 குற்ற வழக்குகள் உள்ளன.

35% முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு
ஒரே ஒரு வழக்குடன் கிரிமினல் முதல்வர்கள் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளார்கள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெக்பூபா முஃப்தியும், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரும். மொத்தத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏஎடிஆர் செய்த ஆய்வில் 35 சதவீத முதல்வர்கள் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதை தாங்களே ஒப்பு கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.












Click it and Unblock the Notifications