காங், அ.தி.மு.க. ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதி எல்.கே. அத்வானி- துணை ஜனாதிபதி முரளி மனோகர் ஜோஷி?
டெல்லி: நாட்டின் அடுத்த அடுத்த ஜனாதிபதியாக அத்வானியும் துணை ஜனாதிபதியாக முரளி மனோகர் ஜோஷியும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது துணைப் பிரதமராகப் பதவி வகித்த அத்வானியைத்தான் 2014-இல் நடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், அயோத்தி வழக்கின் நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் நரேந்திர மோடியை அப்பதவிக்கு முன்னிறுத்தியது பா.ஜ.க.
இதையடுத்து பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு அவர் சந்தித்த முதலாவது முக்கியப் பிரமுகர் அத்வானிதான். இந்நிகழ்வுக்குப் பிறகு பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் அவ்வப்போது அத்வானியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.
பிரணாப்பை முன்மாதிரியாக...
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியில் பிரதமராகும் கனவுடன் இருந்த பிரணாப் முகர்ஜி, அது நிறைவேறாது என்பது தெரிந்தவுடன் ஜனாதிபதியாக ஒப்புக்கொண்டதை முன்மாதிரியாகக் கொண்டு நீங்களும் ஜனாதிபதியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அத்வானியிடம் பா.ஜ.க. தலைவர்கள் யோசனை கூறினர். இதை முதலில் ஏற்க மறுத்த அத்வானி, நாளடைவில் சமாதானமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
2017-ல் ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் 2017 ஆம் ஆண்டு ஜூலை 24-இல் முடிவடைகிறது. அப்போது நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் அத்வானியை வேட்பாளராக நிறுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டுள்ளது. அத்தேர்தலில் அத்வானியை போட்டியின்றித் தேர்வு செய்வதற்கான பொறுப்பு மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காங், அ.தி.மு.க. ஆதரவு
அத்வானி ஜனாதிபதி ஆவதற்கு லோக்சபாவில் அதிக இடங்கள் கொண்ட காங்கிரஸ், அதற்கடுத்த நிலையில் உள்ள அண்ணா தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியாக அத்வானி தேர்வு செய்யப்படுவதில் தடை ஏதும் இருக்காது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
துணை ஜனாதிபதியாக ஜோஷி
இந்நிலையில் பா.ஜ.க. தலைமையுடனும், மத்திய அமைச்சர்களுடனும் ஒத்துப்போகாத கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை துணை ஜனாதிபதி பதவிக்குத் தேர்வு செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசியல் திட்டம் எனவும் கூறப்படுகிறது.
போட்டியின்றி தேர்வு செய்ய..
துணை ஜனாதிபதி தேர்தலில் ஜோஷி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் இல்லாததால், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்டவற்றின் தயவை பா.ஜ.க. நாடி வருகிறது.
2012-இல் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங், காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹமீது அன்சாரியிடம் 252 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்பட்ட அரசியல் இறங்கு முகம் தமக்கும் நேரக் கூடாது என்பதில் முரளி மனோகர் ஜோஷி உறுதியாக உள்ளாராம்.
இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி முரளி மனோகர் ஜோஷியை துணை ஜனாதிபதியாகப் போட்டியின்றித் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளை பா.ஜ.க. மேலிடம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.