என் செருப்பு எங்கே?: இடிபாடுகளில் இருந்து 72 மணிநேரம் கழித்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி!
சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான்.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார்.
மோப்ப நாய்
கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவர் சிக்கிய இடத்தில் மோப்ப நாய் குரைத்தது. இதையடுத்து மீட்பு பணியினர் அங்கு யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்தனர். அப்போது தான் அங்கு குமார் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
குளுகோஸ்
காலை 9 மணியில் இருந்து குமாரை மீட்க போராடினர். இந்நிலையில் மதியம் 1.30 மணிக்கு அவருக்கு ட்யூப் வழியாக குளுகோஸ் கொடுக்க அவர் கண் இமைக்கும் நேரத்தில் 2 பாட்டில் குளுகோஸை குடித்துவிட்டு மேலும் வேண்டும் என்று கேட்டார்.
மாலை
மாலை 5 மணி அளவில் தான் குமாரை இடிபாடுகளை அகற்றி பத்திரமாக மீட்க முடிந்தது. வெளியே வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி என் செருப்பு எங்கே என்று தான். அதற்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த கமாண்டர் எம்.கே. வர்மாவோ நான் புதிய செருப்பு வாங்கித் தருகிறேன் என்று அன்பாக தெரிவித்துள்ளார்.
தண்ணீர்
வெளியே வந்த குமாருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. நீரை குடித்துவிட்டு முகத்தை கழுவிவிட்டு அவர் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.