ஜெயலலிதாவை பார்க்க வரும் கட்சியினருக்கு தொல்லை தராதீர்கள்: பெங்களூர் கமிஷனரிடம் அதிமுக மனு
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வரும்போது, அதிமுக நிர்வாகிகளுக்கு பெங்களூர் போலீசார் எந்த வகையிலும் இடையூறு விளைவிக்க கூடாது என்று கர்நாடக அதிமுக நிர்வாகிகள் பெங்களூர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை கேட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 27ம்தேதி சனிக்கிழமை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகிறார். அப்போது கோர்ட்டுக்கு வெளியே ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து போலீசார் பல வகைகளிலும் தொண்டர்கள் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அதிமுக சார்பில் நிர்வாகி கிருஷ்ணராஜ் தலைமையிலான நிர்வாகிகள், போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் பெங்களூர் வருகையை முன்னிட்டு கர்நாடக மாநில கழக தோழர்களும் மற்றும் பொதுமக்களும் பல்லாயிர கணக்கில் அவரை பார்ப்பதற்கு வருவார்கள். அவர்களுக்கு போலீஸ் தரப்பில் எந்த தொல்லையும் தரக்கூடாது. அதே நேரத்தில் அம்மா அவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காமல் போலீஸ் அதிகாரிகள் கூறும் இடத்தில் கழக தோழர்கள் நிற்போம்.
கழக தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் போலீஸ் தரப்பில் இருந்து எந்த இடைஞ்சலும் செய்ய வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற போலீஸ் கமிஷனர், கழகத்தினரும், பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதே நேரத்தில் போலீஸ் தரப்பில் இருந்து எந்த தொல்லையும் இருக்காது என்று உறுதியளித்தார்.